வள்ளியூர் அருகே கொலை செய்யப்பட்ட விவசாயி உடலை வாங்க மறுத்து 3-வது நாளாக உறவினர்கள் போராட்டம்
- சகோதரர்களுக்கு இடையே சொத்து தகராறில் கொலை
- நம்பிராஜன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க கோரிக்கை
நெல்லை:
வள்ளியூர் அருகே உள்ள வடக்கு ஆச்சியூரை சேர்ந்தவர் நம்பிராஜன். இவருக்கும், அவரது சகோதரருக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வருகிறது.
இந்நிலையில் கடந்த 3-ந் தேதி வயலில் தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்த போது நம்பிராஜனுக்கும் அவரது தம்பி ஆறுமுகவேலுக்கும் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த ஆறுமுகவேல் நம்பிராஜனை கொலை செய்தார். தகராறில் காயம் அடைந்த ஆறுமுகவேலை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர் போலீஸ் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சூழ்நிலையில் நம்பிராஜனின் கொலையில் அவரது சகோதரர்கள் உள்பட 6 பேருக்கு தொடர்பு இருப்பதாகவும், எனவே அனைவர் மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும், நம்பிராஜன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்
என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நம்பிராஜனின் உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுத்து இன்று 3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தொடர்ந்து போலீசாரும், அதிகாரிகளும் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.