போராட்டத்தில் ஈடுபட முயன்ற 148 பேர் கைது
- ஸ்ரீவில்லிபுத்தூர் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 148 பேர் கைது செய்யப்பட்டனர்.
- ரைட்டான்பட்டி தெருவில் அந்த கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி 2-வது வார்டுக்குட்பட்ட ரைட்டான்பட்டி பகுதியில் 30 சென்ட் இடத்தில் கடந்த 1983-ம் ஆண்டு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் மாணவியர் விடுதி கட்டப்பட்டது. இந்த கட்டிடம் சேதமடைந்ததால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இடிக்கப்பட்டது. அதே பகுதியில் 18 சென்ட் இடத்தில் புதிதாக விடுதி கட்டுவதற்கு ரூ.1.25 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த இடம் குறிப்பிட்ட சமுகத்தினருக்கு சொந்தமான இடம் என்று கூறி, அங்கு சமுதாயக்கூடம் கட்ட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. அதுகுறித்து 2 முறை வட்டாட்சியர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இந்த நிலையில் அந்தப்பகுதியில் சமுதாய கூடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டும் போராட்டம் நடத்தப்படும் என ஆதித்தமிழர் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து சிவகாசி கோட்டாட்சியர் அலுவலகத்தில், அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் அதில் உடன்பாடு ஏற்படவில்லை.
இந்தநிலையில் போராட்டத்தில் ஈடுபட வந்த ஆதித்தமிழர் கட்சித்தலைவர் ஜக்கையன் கைது செய்யப்பட்டார். இதை கண்டித்து ரைட்டான்பட்டி தெருவில் அந்த கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட விருதை வசந்தன் உள்ளிட்ட148 பேரை போலீசார் கைது செய்தனர்.