கோவில் உண்டியல் பணம் திருட்டு; மற்றொரு கோவிலில் கொள்ளை முயற்சி
- சாத்தூர் அருகே கோவில் உண்டியல் பணம் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
- கம்பிகள் வளைக்கப்பட்டிருந்தது.
விருதுநகர்
சாத்தூர் அருகே உள்ள வடமலாபுரம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவர் நாரணம்மாள் கோவில் பூசாரியாக உள்ளார். இவர் காலையில் கோவிலுக்கு சென்ற போது கோவிலின் கதவு திறந்து கிடந்தது.
அவர் உள்ளே சென்று பார்த்த போது உண்டியல் உடைக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சியடைந்த அவர் உண்டியலை பார்த்த போது பணம் திருடப்பட்டது தெரியவந்தது. உண்டியலில் சுமார் ரூ.40 ஆயிரம் பணம் இருந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து திருத்தங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவில் உண்டியல் பணத்தை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
திருச்சுழி தாலுகா வீரக்குடி வேளாளர் தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் அங்குள்ள முருகய்யனார் கோவில் அர்ச்சகராக உள்ளார். சம்பவத்தன்று காலையில் கோவிலுக்கு சென்ற போது கிரில் கதவு உடைக்கப்பட்டிருந்தது. மேலும் சில கம்பிகள் வளைக்கப்பட்டிருந்தது.
உள்ளே சென்று பார்த்த போது பொருட்கள் எதுவும் திருட்டு போகவில்லை. மர்ம நபர்கள் யாரோ கதவை உடைத்து திருட முயற்சி செய்துள்ளனர். இதுகுறித்து ஜெயக்குமார் நரிக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.