உள்ளூர் செய்திகள்

ஒகேனக்கல்லில் நீர்வரத்து 1.45 லட்சம் கனஅடியாக சரிவு

Published On 2024-07-29 06:13 GMT   |   Update On 2024-07-29 06:14 GMT
  • காவிரி கரையோர மக்களுக்கு தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றனர்.
  • தீயணைப்பு வீரர்கள், போலீசார், வருவாய் துறையினர் ஆகியோர் வெள்ளத் தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒகேனக்கல்:

கர்நாடகா, கேரளா காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வந்ததால், கர்நாடக அணைகளான கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி ஆகிய அணைகள் அதன் முழு கொள்ளளவை எட்டியது. இதனால் அந்த அணைகளுக்கு வரும் உபரி நீரை அப்படியே காவிரி ஆற்றில் வெளியேற்றி வருகிறது.

இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் காலை இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 1 லட்சத்து 43 ஆயிரம் கனஅடி அளவில் நீர் வெளியேற்றப்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று மாலை சற்று அதிகரித்து வினாடிக்கு 1 லட்சத்து 66 ஆயிரம் கன அடியாக தண்ணீர் இன்று 1 லட்சத்து 43 ஆயிரம் கனஅடி அளவில் நீர் திறந்து விடப்பட்டது.

கர்நாடகா அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் தமிழக-கர்நாடகா எல்லை பகுதியான பிலிக்குண்டுலு வழியாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு கடந்த 2 தினங்களாக தொடர்ந்து நீர்வரத்து 1 லட்சம் கனஅடிக்கு மேல் அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது.

இந்த நீரானது நேற்று காலை 9 மணி நிலவரப்படி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வினாடிக்கு 1 லட்சத்து 55,000 கன அடியாக அதிகரித்து காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மதியம் 1 மணி நிலவரப்படி நீர்வரத்து மேலும் அதிகரித்து 1 லட்சத்து 60,000 கன அடியாக அதிகரித்தது.

இந்த நீர்வரத்தானது நேற்று மாலை வரை அதே நிலையில் நீடித்து வந்தது. இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சற்று சரிந்து 1 லட்சத்து 45 ஆயிரம் கன அடியாக குறைந்து வந்து கொண்டிருக்கிறது.

மேலும் கர்நாடகா அணைகளான கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளுக்கு நீர்வரத்து குறைந்ததால் தமிழகத்திற்கு திறந்து விடும் உபரி நீர் 1 லட்சத்து 43 ஆயிரம் கன அடியாக சரிந்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்தும் சரிய வாய்ப்பு உள்ளது என மத்திய நீர் ஆணைய அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக பிலிக்குண்டுலு பகுதியில் தொடர்ந்து நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

இன்று 3-வது நாளாக ஒகேனக்கலில் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக நாகர்கோவில், முதலை பண்ணை, பென்னாகரத்தில் உள்ள நாகமரை, ஏரியூர் ஆகிய காவிரி கரையோர மக்களுக்கு தொடர்ந்து ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றனர். மேலும் அதிகாரிகள் வெள்ளம் சூழந்துள்ள பகுதிகளை நேரில் பார்வையிட்டு பொதுமக்களை மக்கள் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ள தனியார் திருமண மண்டபம் மற்றும் அரசு பள்ளிகளில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு காரணமாக, சுற்றுலா தளத்தில் பரிசல் இயக்கவும் அருவிகளில் மற்றும் காவிரி ஆற்றங்கரை ஓரங்களில் குளிக்கவும் 14-வது நாளாக தொடர்ந்து தடை நீடித்து வருகிறது. தீயணைப்பு வீரர்கள், போலீசார், வருவாய் துறையினர் ஆகியோர் வெள்ளத் தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News