உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
- கபிலர்மலை வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் உலக மக்கள் தொகை தினம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
- வளர் இளம் பெண்கள் ஆரோக்கியத்தில் அரசின் சிறப்பு திட்டங்கள் ஆகியவை குறித்தும் மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, கபிலர்மலை வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் உலக மக்கள் தொகை தினம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பாண்டமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மாணவிகள், ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் சுகாதார துறையினர் கலந்து கொண்டு உலக மக்கள் தொகை தினத்திற்கான உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.
மேலும் மக்கள் தொகை பெருக்கத்தின் விளைவுகள், ஆணும் பெண்ணும் சமம், பெண் சிசுக்கொலை தடுத்தல், பெண் கல்வியை ஊக்குவித்தல், இளம் வயது திருமணத்தை தடுத்தல், வளர் இளம் பெண்கள் ஆரோக்கியத்தில் அரசின் சிறப்பு திட்டங்கள் ஆகியவை குறித்தும் மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
உலக மக்கள் தொகை விழிப்புணர்வு தொடர்பான பேச்சுப்போட்டி மற்றும் ஓவியப் போட்டி நடத்தப்பட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவியர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு கபிலர் மலை வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் சாந்தி தலைமை வகித்து வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.
வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சிவநேசன், பள்ளியின் தலைமை ஆசிரியை சுமதி, ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் சமுதாய சுகாதார செவிலியர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர் மாரியப்பன் மற்றும் வட்டார சுகாதாரப் புள்ளியியலாளர் ஐஸ்வர்யா ஆகியோர் செய்திருந்தனர்.