செய்திகள்

மோடியை எதிர்கொள்ள மன்மோகன்சிங் தான் பொருத்தமானவர் - பிரகாஷ் அம்பேத்கார்

Published On 2018-05-22 08:28 GMT   |   Update On 2018-05-22 08:28 GMT
ராகுல்காந்திக்கு அனுபவம் போதாது தேர்தலில் மோடியை எதிர்கொள்ள மன்மோகன்சிங் தான் பொருத்தமானவர் என்று பிரகாஷ் அம்பேத்கார் கூறியுள்ளார். #Parliamentelection #PMModi #ManmohanSingh

மும்பை:

அம்பேத்காரின் பேரனும், தலித் அமைப்பின் தலைவருமான பிரகாஷ் அம்பேத்கார் மராட்டிய மாநிலம் பந்தர்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் தரப்பில் இருந்து மோடியை எதிர்கொள்ள வேண்டும் என்றால் அதற்கு சரியான தலைவர் வேண்டும். அந்த வகையில் பார்க்கும்போது மோடியை எதிர்கொள்ள முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் தான் பொருத்தமான தலைவராக இருக்கிறார்.

மன்மோகன்சிங் ஏற்கனவே பிரதமராக இருந்து வெற்றிகரமாக ஆட்சியை நடத்தியவர். மோடியின் பொய் பிரசாரத்தை மன்மோகன்சிங் தான் எதிர்கொண்டு அவரை வீழ்த்த முடியும்.


அதே நேரத்தில் ராகுல் காந்திக்கு இன்னும் அரசியல் அனுபவம் போதாது. அவர் இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியது உள்ளது.

பாரதிய ஜனதாவை பொருத்த வரை ஆட்சியை கைப்பற்ற எந்த நிலைபாடு வேண்டுமானாலும் எடுக்கலாம். இதற்கு மேலும் பாரதிய ஜனதா ஆட்சியில் நீடித்தால் அது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல.

அரசியலமைப்பு சட்டத்தையே தங்களுக்கு சாதகமாக மாற்றியமைக்க பாரதிய ஜனதா முயல்கிறது. இது நாட்டுக்கு நல்லதல்ல.

தலித் மக்கள் முன்னேற்றத்தை பாரதிய ஜனதா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் என பல கட்சிகளும் தடுத்து வருகின்றன. இடஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு வி‌ஷயங்களில் அவர்கள் மக்களை ஏமாற்றி வருகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார். #Parliamentelection #PMModi #ManmohanSingh

Tags:    

Similar News