எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு மாயாவதி திடீர் நிபந்தனை
புதுடெல்லி:
மத்தியில் பா.ஜனதா, காங்கிரசுக்கு எதிராக புதிய அணியை உருவாக்கும் முயற்சியில் மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில் கர்நாடகத்தில் பா.ஜனதாவை ஆட்சிக்கு வரவிடாமல் காங்கிரஸ்- ஜே.டி.எஸ். கூட்டணி தடுத்து விட்டதால் காங்கிரசுக்கு எதிரான போக்கை கட்சிகள் கைவிட்டு அதனுடன் கைகோர்க்க தயாராகி வருகின்றன.
பெங்களூரில் நடந்த குமாரசாமி பதவி ஏற்பு விழாவில் சோனியா, ராகுலுடன் பகுஜன் சமாஜ் கட்சி மாயாவதி, சமாஜ்வாடி கட்சி அகிலேஷ் யாதவ், ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
உத்தரப்பிரதேசத்தில் நடந்த இடைத்தேர்தலின் போது எதிரும் புதிருமாக இருந்த மாயாவதியும், அகிலேசும் ஒன்று சேர்ந்ததால் பா.ஜனதா தோற்றது.
அதன்பிறகு இரு தலைவர்களும் பெங்களுரில் ஒரே மேடையில் கலந்து கொண்டது எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கு எடுத்துக் காட்டாக விளங்கியது.
இந்த நிலையில் மாயாவதி லக்னோவில் நடந்த பகுஜன் சமாஜ் கட்சி கூட்டத்தில் பேசுகையில், எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு திடீர் என்று நிபந்தனை விதித்தார்.
அவர் பேசுகையில், பாராளுமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு போதுமான தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும், அப்படி ஒதுக்கப்பட்டால் தான் கூட்டணி சேருவோம். இல்லையெனில் தனித்தே தேர்தலை சந்திக்க தயாராக இருக்கிறோம் என்றார்.
மாயாவதி மேலும் பேசுகையில், “பா.ஜனதாவை அடியோடு நீக்கும் நேரம் வந்து விட்டது. இன்னும் அடுத்த 20 ஆண்டுகளுக்கு நான்தான் பகுஜன் சமாஜ் கட்சி தலைவராக நீடிப்பேன்” என்றார். #Mayawati #BJP #Parliamentelection