செய்திகள்

குழந்தைக்கு பெயர் சூட்ட வாக்குப்பதிவு நடத்திய தம்பதி

Published On 2018-06-18 23:22 GMT   |   Update On 2018-06-18 23:22 GMT
குழந்தைக்கான பெயரை சூட்ட வாக்குப்பதிவு நடத்தி புதுமையான முறையில் பெயர் தேர்வு செய்த தம்பதிகள் பற்றிய செய்தி ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. #BabyName #MaharashtraCouple
நாக்பூர்:

மராட்டிய மாநிலம் கோண்டியா மாவட்டம் தியோரி தாலுகாவை சேர்ந்தவர் மிதுன் பங் (வயது 34), தொழில் அதிபர். இவரது மனைவி மன்சி. இந்த தம்பதிக்கு கடந்த ஏப்ரல் மாதம் 5-ந் தேதி ஆண் குழந்தை பிறந்தது.

இந்த குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என இவர்களுக்குள் குழப்பம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து குழந்தைக்கான பெயரை வாக்குப்பதிவு நடத்தி புதுமையான முறையில் தேர்வு செய்ய அவர்கள் முடிவு செய்தனர்.

இதன்படி யாக்‌ஷ், யுவன், யுவிக் ஆகிய 3 பெயர்களை தேர்வு செய்து உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இடையே வாக்குப்பதிவு நடத்தினர். இதன்படி சம்பவத்தன்று மிதுன் பங்கின் வீட்டிற்கு அவரது நண்பர்கள் உறவினர்கள் வருகை புரிந்தனர். முன்னாள் எம்.பி. நானா பட்டோலே இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.

இதையடுத்து ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டு இருந்த 3 பெயர்களுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. 192 பேர் இதில் கலந்து கொண்டு வாக்குச்சீட்டு மூலம் ஓட்டுப்போட்டனர். இதில், யுவன் என்ற பெயர் அதிகபட்சமாக 92 ஓட்டுகள் பெற்று தேர்வு செய்யப்பட்டது. இதையடுத்து குழந்தைக்கு பெற்றோர்கள் யுவன் என பெயர் சூட்டினர். 
Tags:    

Similar News