லாலு மகள்-மருமகன் பண்ணை வீடுகள் முடக்கம் - வருமான வரித்துறை நடவடிக்கை
புதுடெல்லி:
பீகார் முன்னாள் முதல்- மந்திரி லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீதான பல்வேறு முறைகேடு குறித்து அமலாக்கத்துறை, வருமான வரித்துறை விசாரணை நடத்தி வருகிறது.
லாலு குடும்பத்தினர் மீதான வரி ஏய்ப்பு தொடர்பாக இந்த ஆண்டு தொடக்கத்தில் ரூ.1000 கோடி மதிப்புள்ள அசையா சொத்துக்களை வருமான வரித்துறை தற்காலிகமாக முடக்கி இருந்தது. இது தொடர்பான விசாரணையில் பினாமி பெயர்களில் சொத்துக்களை வாங்கி இருந்தது தெரியவந்தது.
டெல்லி பிஜ்வாசன் பகுதியில் லாலு மகள் மிசா பார்தி, மருமகன் சைலேஷ் குமார் ஆகியோருக்கு சொந்தமான இரண்டு பண்ணை வீடுகள் அடுத்தடுத்து உள்ளன. இந்த சொத்துக்களை பினாமி பெயரில் வாங்கி இருந்தனர். கே.எச்.கே. கோல்டிங்ஸ் என்ற போலி நிறுவனம் மூலம் இந்த பண்ணை வீடுகள் வாங்கப்பட்டன. பின்னர் இந்த சொத்துக்கள் இருவரது பெயருக்கு மாற்றப்பட்டன.
இந்த நிலையில் மிசாபார்தி, சைலேஷ்குமாருக்கு சொந்தமான இரண்டு பண்ணை வீடுகளை வருமான வரித்துறை முடக்கி உள்ளது. இதன் மதிப்பு ரூ.15 கோடியாகும்.
பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் இந்த சொத்துக்களை முடக்கி நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது. #LaluPrasadYadav #IncomeTax