செய்திகள்

அயோத்தியில் நடைபெறும் தீபாவளி கொண்டாட்டத்தில் தென்கொரிய அதிபர் மனைவி பங்கேற்பு

Published On 2018-11-02 10:03 GMT   |   Update On 2018-11-02 10:03 GMT
அயோத்தியில் நடைபெற உள்ள தீபாவளி கொண்டாட்டத்தின் இறுதி நாளான தீப உற்சவத்தில் தென்கொரிய அதிபரின் மனைவி பங்கேற்க உள்ளார். #Ayodhya #DiwaliCelebrations #KoreasFirstLady
லக்னோ:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் 4-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை மூன்று நாட்கள் தீப உற்சவம் நடைபெறுகிறது. இதில் உபி கவர்னர் ராம் நாயக், முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பல்வேறு பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர்.

இந்த கொண்டாட்டத்தில் தென்கொரிய அதிபர் மூன் ஜேன் இன் மனைவி கிம் ஜங்-சூக் பங்கேற்க உள்ளார். இவர் மூன்றாவது நாள் நடைபெற உள்ள பிரமாண்ட தீப உற்சவத்தில் பங்கேற்கிறார். அன்றைய தினம் சுமார் 3 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றி வழிபாடு நடத்தப்படும்.



சிறப்பு விமானம் மூலம் 5ம் தேதி லக்னோ வந்து சேருகிறார் கிம் ஜங்-சூக். அவருக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் இரவு விருந்து அளித்து உபசரிக்கிறார். மறுநாள் (6-ம் தேதி) தனது குழுவினருடன் லக்னோவில் இருந்து அயோத்திக்கு செல்லும் கிம் ஜங்-சூக், சரயு நதிக்கடையில் நடைபெறும் தீப உற்சவ நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

பின்னர், ராணி ஹர் ஹூவாங்-ஓக் நினைவிடத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார் கிம் ஜங்-சூக். அயோத்தி இளவரசியான சூரிரத்னா தென் கொரியா சென்று அந்நாட்டு மன்னரை மணந்தபின்னர் ஹர் ஹூவாங்-ஓக் என அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

உ.பி.யில் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு கிம் ஜங்-சூக் 7-ம் தேதி காலை சிறப்பு விமானம் டெல்லி சென்று, அங்கிருந்து கொரியாவுக்கு புறப்படுகிறார்.

தென் கொரிய அதிபரின் மனைவி வருகையையொட்டி அயோத்தியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  #Ayodhya #DiwaliCelebrations #KoreasFirstLady

Tags:    

Similar News