செய்திகள்

மாண்டியாவில் ஜேடிஎஸ் பிரமுகர் படுகொலை- ஆதரவாளர்கள் தீவிர போராட்டம்

Published On 2018-12-25 07:31 GMT   |   Update On 2018-12-25 07:31 GMT
மாண்டியாவில் ஜேடிஎஸ் கட்சி பிரமுகர் பிரகாஷ் கொல்லப்பட்டதையடுத்து, அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். #MandyaMurder #JDSLeaderPrakash
மாண்டியா:

கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் ஆளும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் (ஜேடிஎஸ்) முக்கிய நிர்வாகியாக திகழ்ந்தவர் கொன்னலாஹரே பிரகாஷ் (வயது 48). இவர் நேற்று மாலை கட்சி நிகழ்ச்சி முடிந்து தனது காரில் வீட்டுக்கு சென்றபோது, பின்தொடர்ந்து சென்ற வாலிபர்கள் காரை மறித்து கொன்னலாஹரே பிரகாசை கடுமையாக தாக்கி உள்ளனர். கத்தியாலும் வெட்டி உள்ளனர். இதில், ரத்த வெள்ளத்தில் பிரகாஷ் அதே இடத்தில் சரிந்து விழுந்தார். அவரை மாண்டியா மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினார்கள்.

பிரகாஷ் கொல்லப்பட்ட தகவல் அறிந்ததும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி தொண்டர்கள் கடும் ஆத்திரமடைந்தனர். மருத்துவமனைக்கு சென்று அவரது உடல் வைக்கப்பட்டிருந்த அறையின் ஜன்னல் கண்ணாடியை உடைத்தனர்.

பின்னர், மைசூர்-பெங்களூர் நெடுஞ்சாலையில் மாத்தூர் என்ற இடத்தில் மறியலில் ஈடுபட்டனர். மாண்டியா எம்எல்ஏ ஷிவராமே கவுடாவும் போராட்டத்தில் பங்கேற்றார். இப்போராட்டம் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுமார் 2 கிமீ தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், தோப்பனஹள்ளியில் நடந்த இரட்டைக் கொலை தொடர்பாக ஜேடிஎஸ் மற்றும் காங்கிரஸ் தொண்டர்களிடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

தோப்பனஹள்ளியைச் சேர்ந்த பிரகாஷ், முதல்வர் குமாரசாமிக்கு மிகவும் நெருக்கமானவர் என கூறப்படுகிறது. சமீபத்தில் நடந்த தேர்தலில் முக்கிய பங்காற்றி உள்ளார். பிரகாஷின் மனைவி மாண்டியா ஜில்லா பஞ்சாயத்து தலைவராக பணியாற்றியவர். #MandyaMurder #JDSLeaderPrakash
Tags:    

Similar News