செய்திகள்

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக பாஜக, ஆர்.எஸ்.எஸ். வன்முறையில் ஈடுபடுகிறது- பினராய் விஜயன்

Published On 2019-01-07 11:17 GMT   |   Update On 2019-01-07 11:17 GMT
கேரளாவில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக பாரதீய ஜனதா, ஆர்.எஸ்.எஸ். வன்முறையில் ஈடுபடுகிறது என்று பினராய் விஜயன் கருத்து தெரிவித்துள்ளார். #pinarayivijayan #sabarimala #rss #bjp

திருவனந்தபுரம்:

சபரிமலை அய்யப்பன் கோவிலில் இளம்பெண்கள் இருவர் தரிசனம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 3-ந்தேதி கேரளாவில் அய்யப்ப பக்தர்கள் முழு அடைப்பு போராட்டம் நடத்தினார்கள்.

முழு அடைப்பு போராட்டம் காரணமாக கேரளாவில் வன்முறை, கலவரங்கள் மூண்டன. அரசு பஸ்கள், பொது சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. கம்யூனிஸ்டு கட்சி அலுவலகங்கள், எம்.பி., எம்.எல். ஏ.க்கள் வீடுகள் மீதும் தாக்குதல் நடந்தது. அய்யப்ப பக்தர் ஒருவரும் பலியானார்.

முழு அடைப்பு நடந்து 3 நாட்கள் ஆன பின்பும் கேரளாவில் இன்னும் பல இடங்களில் தகராறு ஓயவில்லை.

கேரளாவில் தொடரும் வன்முறை குறித்து பாரதீய ஜனதா கட்சி கடும் கண்டனம் தெரிவித்தது. கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் நரசிம்மராவ் கூறும்போது, கேரள அரசு வன்முறையை தடுக்காவிட்டால் அரசியல் சட்ட விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்தார்.

இதற்கிடையே மத்திய உள்துறையும், கேரள அரசிடம் அறிக்கை கேட்டது. இந்த விவகாரம் தொடர்பாக கேரள முதல்-மந்திரி பினராய் விஜயன் பேஸ்புக்கில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

கேரளாவில் இப்போது சட்டம்-ஒழுங்கு கட்டுப்பாட்டில் உள்ளது. வன்முறையில் ஈடுபடுவோர் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். அரசியலுக்கு அப்பாற்பட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக கேரளாவில் நடக்கும் போராட்டங்களுக்கு பாரதீய ஜனதா, ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளே காரணம்.


கேரள அரசுக்கு எந்த மிரட்டலும் இல்லை. மக்களின் அமைதியான வாழ்வுக்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பது அரசின் கடமை. அதை அரசு தொடர்ந்து செய்யும். மாநிலத்தில் கால் ஊன்ற சங்பரிவார் அமைப்புகளே கலவரத்தை தூண்டுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார். #pinarayivijayan #sabarimala #rss #bjp

Tags:    

Similar News