தடுப்பூசி பற்றி விமர்சனம்: ராகுல்காந்திக்கு எதுவுமே புரியவில்லை - மத்திய மந்திரி ஹர்சவர்தன் தாக்கு
புதுடெல்லி:
கொரோனா நோயை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு சரியாக செயல்படவில்லை என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.
மேலும் போதிய அளவுக்கு மத்திய அரசு தடுப்பூசி தேவையை பூர்த்தி செய்யவில்லை என்று குற்றம்சாட்டுகிறார்.
இந்த நிலையில் ராகுல் காந்தி புதிதாக டுவிட்டரில் ஒரு செய்தி வெளியிட்டு இருந்தார். அதில், ‘‘ஜூலை மாதம் வந்துவிட்டது. ஆனாலும் தடுப்பூசியை காணவில்லை’’ என்று கூறி இருந்தார்.
இது சம்பந்தமாக மத்திய சுகாதார மந்திரி ஹர்சவர்தன் டுவிட்டரில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார்.
ஜூலை மாதம் 12 கோடி டோஸ் தடுப்பூசி மருந்து சப்ளை செய்யப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ராகுல்காந்தி எதையுமே படிப்பதும் இல்லை, எதையும் புரிந்து கொள்வதும் இல்லை. அவருக்கு என்ன பிரச்சினை என்று தெரியவில்லை.
இதையும் படியுங்கள்...பிரான்சில், செப்டம்பரில் கொரோனா 4-ம் அலை ஏற்பட வாய்ப்பு - அறிவியல் ஆலோசகர் அதிர்ச்சி தகவல்
தடுப்பூசி தொடர்பாக அறியாமையால் ஏதேதோ சொல்கிறார். அறியாமை, ஆணவத்தை குணப்படுத்த இதுவரை தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை. முதலில் காங்கிரஸ் தலைமையை சீரமைப்பது தொடர்பாக சிந்திக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.