செய்திகள்
பள்ளி மாணவி உள்ளிட்ட 5 கிராமத்தினரை கடத்திச் சென்ற மாவோயிஸ்டுகள்
அழைத்துச் செல்லப்பட்ட கிராம மக்களை மாவோயிஸ்டுகள் விடுவிக்கவேண்டும் என பழங்குடி சமுதாய அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
ராய்ப்பூர்:
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் உள்ள பாதர் கிராமத்தைச் சேர்ந்த 5 நபர்களை மாவோயிஸ்டுகள் கடத்திச் சென்றுள்ளனர். காணாமல் போனவர்களை பாதுகாப்பு படையினர் தேடி வருகின்றனர்.
தலைநகர் ராய்ப்பூரில் இருந்து 400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வனப்பகுதியில் உள்ளது இந்த கிராமம். நேற்று மாலை இந்த கிராமத்திற்குள் புகுந்த மாவோயிஸ்டுகள், 5 பேரை கடத்திச் சென்றதாகவும், அவர்களில் ஒருவர் 12ம் வகுப்பு படிக்கும் மாணவி என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக சுக்மா மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு தெரிவித்தார்.
அவர்கள் எதற்காக கடத்தப்பட்டார்கள் என்ற தகவல் தெரியவில்லை. சில சமயம் கூட்டங்களில் கலந்துகொள்வதற்காக அழைத்துச் செல்வதும் உண்டு. எனவே, அழைத்துச் செல்லப்பட்ட கிராமத்தவர்களை மாவோயிஸ்டுகள் விடுவிக்கவேண்டும் என பழங்குடி சமுதாய அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் குண்டட் பகுதியில் இருந்து 8 பேரை கடத்திச் சென்ற மாவோயிஸ்டுகள், 3 நாட்களுக்குப் பிறகு விடுவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... ஆர்யன் கான் வழக்கு கடத்தல், பணம் பறித்தல் பற்றியது: நவாப் மாலிக் குற்றச்சாட்டு