செய்திகள்
பீகார் முதல்வர் நிதிஷ் குமார்

மதுவிலக்கு உத்தரவை மீறும் போலீசார், கலால் துறையினர் மீது கடும் நடவடிக்கை-பீகார் முதல்வர் அதிரடி

Published On 2021-11-17 07:07 GMT   |   Update On 2021-11-17 07:07 GMT
பிற மாநிலங்களில் இருந்து பீகாருக்கு மதுபானம் கடத்தப்படும் வழிகளை கண்டறிந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபடுமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டார்.
பாட்னா:

பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த நிதிஷ் குமார் தலைமையிலான அரசு நடைபெற்று வருகிறது. கடந்த 2015ம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்ற நிதிஷ், ஏப்ரல் 5-ம் தேதி அன்று மாநிலத்தில் மதுபானம் உற்பத்தி, வர்த்தகம், சேமிப்பு, போக்குவரத்து, விற்பனை மற்றும் நுகர்வுக்கு தடை விதித்து உத்தரவிட்டார்.



எனினும் பல்வேறு பகுதிகளில் கள்ளச்சாராய விற்பனை அமோகமாக நடக்கிறது. கடந்த தீபாவளி பண்டிகைக்கு பிறகு, மாநிலத்தில கள்ளச் சாரயம் குடித்து 47 பேர் அடுத்தடுத்து இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக, பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் நேற்று உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றது. ஏழு மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மாநிலத்தின் அனைத்து அமைச்சர்கள், மூத்த நிர்வாக அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.

அந்த கூட்டத்தில், மதுவிலக்குஉத்தரவை மீறும் போலீஸ் மற்றும் கலால் துறை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து உள்துறை கூடுதல் தலைமை செயலர் சைதன்ய பிரசாத் கூறியதாவது:  

சமீபத்திய கள்ளச்சாரய சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த முதல்வர், இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மதுவிலக்கை மீறும் செயல்களில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்டால், காவல்நிலைய அதிகாரிகள்(எஸ்.எச்.ஓ) உள்ளிட்ட போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அந்தந்த பகுதிகளில் மதுவிலக்கை அமல்படுத்தத் தவறிய போலீசார் மீது துறை ரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களுக்கு அடுத்த பத்து ஆண்டுகளுக்கு ஸ்டேஷன் இன்சார்ஜ் பதவி வழங்கப்படாது என்றும் முதல்வர் கூறினார்.

மேலும், கலால் மற்றும் பதிவுத் துறையின் மூத்த அதிகாரிகளும், காவல் துறையினரும் அடிக்கடி கூட்டங்களை நடத்தி விவாதிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

பிற மாநிலங்களில் இருந்து பீகாருக்கு மதுபானம் கடத்தப்படும் வழிகளை கண்டறிந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபடுமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டார்.

மதுபானங்களை குடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து மாநில அரசு விரைவில் பிரச்சாரத்தை தொடங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News