இந்தியா
null

பாலியல் குற்றச்சாட்டு: மலையாள திரைப்பட சங்க பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்தார் நடிகர் சித்திக்

Published On 2024-08-25 05:27 GMT   |   Update On 2024-08-25 05:28 GMT
  • ரஞ்சித்துக்கு கேரளாவில் எதிர்ப்பு வலுத்துள்ளது.
  • செய்தியாளர்களிடம் பேசிய சித்திக், என் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விரைவில் பதில் அளிப்பேன் என்றார்.

கேரளாவில் மலையாள நடிகைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை புகார்கள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி ஹேமா கமிஷன் தனது அறிக்கையை கடந்த 2019-ம் ஆண்டு அரசிடம் சமர்பித்தது. கடந்த 4 ஆண்டுகளாக இந்த அறிக்கை வெளியிடப்படாமல் இருந்து வந்தது.

இந்த நிலையில் தகவல் ஆணையத்தின் தலையிட்டால், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹேமா கமிஷன் அறிக்கை வெளியிடப்பட்டது. மலையாள திரைப்பட உலகில் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல்கள் இருப்பதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த அறிக்கை வெளியானது முதல் மலையாள சினிமா உலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பலரும் தாங்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளானது குறித்து தற்போது புகார்களை தெரிவித்து வருகின்றனர். கேரள திரைப்பட அகாடமி தலைவரும், நடிகரும் பிரபல டைரக்டருமான ரஞ்சித் மீது, மேற்கு வங்காளத்தை சேர்ந்த நடிகை ஸ்ரீலேகா மித்ரா பாலியல் குற்றச்சாட்டை கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், கடந்த 2009-ம் ஆண்டு வெளியான பாலேரி மாணிக்கம் படத்தில் நடிக்க என்னை ரஞ்சித் அழைத்தார். அப்போது ஓட்டல் அறையில் வைத்து, அவர் எனக்க பாலியல் துன்புறுத்தல்கள் கொடுத்தார். எனது வளையல்களை தொடுவது போல் கைகளை தடவினார். தலைமுடியையும் கோரி விட்டார். அவரது தவறான நோக்கத்தை புரிந்து கொண்ட நான் அந்தப் படத்தில் இருந்து விலகி விட்டேன். பின்னர் அந்தப் படத்தில் நடிக்கவே இல்லை என்றார்.

எனது குற்றச்சாட்டில் நான் உறுதியாக இருக்கிறேன். ஆனால் கோர்ட்டு வழக்கு என கேரளாவுக்கும் மேற்கு வங்காளத்துக்கும் என்னால் அலைய முடியாது. யாராவது எனக்கு உதவினால் புகார் அளிக்க தயாராக உள்ளேன் என்றும் அவர் கூறியுள்ளார். இந்தப் புகார்களை தொடர்ந்து ரஞ்சித்துக்கு கேரளாவில் எதிர்ப்பு வலுத்துள்ளது. அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினரும், பாராளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தியை எதிர்த்து வயநாட்டில் போட்டியிட்டவருமான ஆனிராஜா, புகாரில் சிக்கிய டைரக்டர் ரஞ்சித் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றார். அவருக்கு எதிராக பேரணி நடத்தப் போவதாக இந்திய வாலிபர் சங்கம் அறிவித்தது.

இந்த சூழலில் நேற்று வயநாட்டில் இருந்து கோழிக்கோடு வந்த ரஞ்சித், தனது காரில் மாட்டியிருந்த அகாடமி சேர்மன் என்ற பெயர்பலகையை அகற்றி விட்டு தான் வந்தார். எனவே அவர் விரைவில் கேரள திரைப்பட அகாடமி தலைவர் பதவியை ராஜினாமா செய்வார் என கூறப்படுகிறது.

இந்த சூழலில் மலையாள திரைப்படகலைஞர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் நடிகர் சித்திக் உள்ளிட்ட மேலும் சிலர் மீதும் பாலியல் புகார்கள் எழுந்து மலையாள சினிமா உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. சித்திக் மீது புகார் கூறிய நடிகை ரேவதி சம்பத், ஒரு திரைப்பட திட்டம் பற்றி விவாதிக்கும் வகையில் சித்திக் தன்னை ஒரு ஓட்டல் அறைக்கு அழைத்தார். அப்போது எனக்கு 21 வயது. அங்கு அவர் பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்தார்.

சித்திக்கிடம் இருந்து தனது நண்பர்கள் பலரும் இது போன்ற கொடுமையை அனுபவித்துள்ளது பின்னர் தெரியவந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த 2019-ம் ஆண்டே இந்த குற்றச்சாட்டை கூறியதாகவும், அப்போது யாரும் அதனை கண்டு கொள்ளவில்லை என்றும் நடிகை ரேவதி சம்பத் கூறியுள்ளார்.

இந்த புகாரை தொடர்ந்து, மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் (அம்மா) பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நடிகர் சித்திக் ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக அம்மா அமைப்பின் தலைவர் மோகன்லாலுக்கு அவர் அனுப்பி உள்ள கடிதத்தில், என் மீதான குற்றச்சாட்டு களை நீங்கள் கவனித்திருக்க வேண்டும்.

இந்த நிலையில் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நான் விலகுகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சித்திக், என் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விரைவில் பதில் அளிப்பேன் என்றார்.

இதற்கிடையில் நடிகை ஜூபிதா, மோகன்லாலின் திரிஷ்யம் படத்தில் நடித்த ஹன்சிபாஹசன் ஆகியோ ரும் வேறு சிலர் மீது பாலி யல் புகார்களை தெரிவித்து உள்ளனர்.

Tags:    

Similar News