இந்தியா

வன்முறை, வெறுப்பை பரப்பும் பாஜக-வினர் இந்து மதத்தின் கொள்கைகளை புரிந்து கொள்ளவில்லை- ராகுல்

Published On 2024-07-03 10:16 GMT   |   Update On 2024-07-03 11:51 GMT
  • குஜராத் காங்கிரஸ் அலுவலகம் மீதான வன்முறை தாக்குதல் பாஜக மற்றும் சங் பரிவார் குறித்த என்னுடைய கருத்தை மேலும் வலுப்படுத்துவதாக உள்ளது.
  • குஜராத்தில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என்பதை மீண்டும் சொல்லிக் கொள்கிறேன்.

நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மக்களவையில் பேசும்போது வன்முறை, வெறுப்பு கொண்ட பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அல்லது மோடி எந்த வகையிலும் இந்துக்கள் என அழைக்க முடியாது எனக் கூறினார். மேலும், இவர்கள் இந்துக்களை பிரதிநிதித்துவம் படுத்துவர்கள் அல்ல என்றார்.

இதற்கு பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோர் கடுமையான வகையில் பதில் அளித்தனர். மேலும், ஒட்டுமொத்த இந்துக்களை அவமதித்ததாக குற்றம்சாட்டினர். இது தொடர்பாக ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.

ராகுல் காந்திக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் போராட்டம் நடைபெற்றது. குஜராத் மாநிலத்தில் பாஜகவினர் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை தாக்கியதாக தெரிகிறது. இதனால் இருகட்சியின் தொண்டர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டது. கல்வீசி தாக்குதல் நடத்தினர்.

இந்த நிலையில் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-

குஜராத் காங்கிரஸ் அலுவலகம் மீதான கோழைத்தளமான மற்றும் வன்முறை தாக்குதல் பாஜக மற்றும் சங் பரிவார் குறித்த என்னுடைய கருத்தை மேலும் வலுப்படுத்துவதாக உள்ளது. வன்முறை மற்றும் வெறுப்பை பரப்பும் பாஜகவினர் இந்து மதத்தின் அடிப்படை கொள்கைகளை புரிந்து கொள்ளவில்லை.

அவர்களுடைய பொய்களை குஜராத் மக்களால் தெளிவாக பார்க்க முடிகிறது. இவர்கள் தீர்க்கமான பாடம் புகட்டுவார்கள். குஜராத்தில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என்பதை மீண்டும் சொல்லிக் கொள்கிறேன்.

இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

நாங்கள் அமைதியாக போராட்டம் நடத்தினோம். காங்கிரஸ் தொண்டர்கள்தான் எங்கள் மீது தாக்குதல் நடத்தினர் என பாஜக குற்றம்சாட்டுகிறது. அதேவேளையில் பாஜக-வினர்தான் வன்முறையை தூண்டினார்கள் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இது தொடர்பாக இரு தரப்பிலும் போலீசார் பலரை கைது செய்துள்ளனர்.

Tags:    

Similar News