இந்தியா (National)

பட்ஜெட் ஹைலைட்ஸ்: தங்கம் மீதான சுங்க வரி குறைப்பு - நிர்மலா சீதாராமன்

Published On 2024-07-23 07:26 GMT   |   Update On 2024-07-23 07:26 GMT
  • நகர்ப்புற பகுதிகளில் நிலம் தொடர்பான ஆவணங்கள் டிஜிட்டல் மயமாக்கப்படும்.
  • காசி விஸ்வநாதர் கோயில் மேம்படுத்தப்படும்.

நடப்பு 2024, 25-ம் நிதியாண்டுக்கான முழுமையான மத்திய பட்ஜெட் இன்று (ஜூலை 23) காலை தாக்கல் செய்யப்பட்டது. தேர்தல் முடிவடைந்து மத்தியில் 3-வது முறையாக பிரதமர் மோடி தலைமையில் ஆட்சியமைந்துள்ளது.

நேற்று பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், பாராளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏழாவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கலை தொடர்ந்து உரையாற்றிய அவர்,

முதலீட்டு செலவினங்களுக்காக இந்த ஆண்டு ரூ.11.11 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது. பீகார் வெள்ள தடுப்பு பணிகளுக்காக ரூ.11,500 கோடி ஒதுக்கீடு. வெள்ள மேலாண்மைக்காக அசாம் மாநிலத்திற்கும் நிதி உதவி வழங்கப்படும். ஒடிசாவில் சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

அதிக பத்திரப்பதிவு நடைபெறும் மாநிலங்களில் பத்திரப்பதிவு கட்டணத்தை குறைக்க வலியுறுத்தப்படும். பீகாரில் 2,400 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய ரூ.21,400 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. நகர்ப்புற பகுதிகளில் நிலம் தொடர்பான ஆவணங்கள் டிஜிட்டல் மயமாக்கப்படும்.

நாட்டின் விண்வெளி சார்ந்த திட்டங்களுக்கு ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு. பழங்குடியின மக்களுக்காக சிறப்பு திட்டங்கள் செயல்படுத்த ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. காசி விஸ்வநாதர் கோயில் மேம்படுத்தப்படும்.

25 ஆயிரம் ஊரக வாழ்விடங்களை இணைக்கும் வகையில் கிராம சாலை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. தொழில் தொடங்குவதை எளிதாக்க ஜன்விஷ்வாஷ் 2.0 மசோதா கொண்டு வரப்படும். நடப்பு நிதியாண்டில் கடன்களை தவிர மொத்த வருவாய் ரூ.32.07 லட்சம் கோடி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிதி பற்றாக்குறை மொத்த ஜிடிபி-யில் 4.09 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு நிதியாண்டில் மொத்த செலவினம் ரூ.48.21 லட்சம் கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்நிய நேரடி முதலீடுகளை அதிகளவில் ஈர்க்கும் வகையில், விதிகள் எளிமையாக்கப்படும். வெளிநாடுகளில் இந்திய ரூபாய் அடிப்படையில் பரிவர்த்தனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

சோலார் பேனல் திட்டத்தின் கீழ் 1 கோடி குடும்பத்திற்கு மாதம் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும். பீகாரில் உள்ள விஷ்ணு போதி, மகா போதி ஆலய வழித்தடங்களை மேம்படுத்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

ஜிஎஸ்டி வரி முறை மேலும் எளிதாக்கப்படும். புற்றுநோய்க்கான 3 முக்கிய மருத்துகளுக்கு சுங்கவரியில் இருந்து முழு விலக்கு அளிக்கப்படுகிறது. மொபைல் போன்கள், அது தொடர்பான சாதனங்கள் மீதான சுங்கவரி 15 சதவீதம் குறைக்கப்படுகிறது.

தங்கம், வெள்ளி மீதான சுங்கவரி 6 சதவீதம் குறைப்பு. பிளாட்டினம் மீதான சுங்கவரி 6.4 சவீதம் குறைக்கப்படுகிறது. இதனால் தங்கம் விலை குறைய வாய்ப்பு உள்ளது. 20 வகையான தாதுக்கள் மீதான சுங்க வரியும் குறைக்கப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News