இந்தியா

கோச்சிங் சென்டர் பலிகள்.. மாணவர்கள் நீரில் தத்தளிக்கும் வீடியோக்கள்.. 13 மையங்களுக்கு சீல்

Published On 2024-07-29 02:23 GMT   |   Update On 2024-07-29 05:57 GMT
  • கோச்சிங் சென்டருக்குள் நீர் புகுவது, மாணவர்கள் வெளியேறுவது, தீயணைப்பு வீரர்கள் போராடுவது உள்ளிட்ட வீடியோக்கள் அடுத்தடுத்து வெளியாகியுள்ளன.
  • போலீசார் பேச்சுவார்த்தையில் சமாதானம் ஏற்படாத நிலையில் மாணவர்களை துண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டனர்.

தலைநகர் டெல்லியில் கனமழை பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் நீர்த் தேக்கம் ஏற்பட்டுள்ளது. டெல்லியின் மேற்குப் பகுதியில் ஓல்ட் இந்திரா நகரில் செயல்பட்டு வரும் ரவு ஸ்டடி சர்க்கிள் என்ற ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் தரைதளத்திற்குள் புகுந்த தண்ணீரில் சிக்கி அங்கு படித்து வந்த 2 மாணவிகள் மற்றும் ஒரு மாணவர் என 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

நேற்று முன் தினம் இரவு 7 மணியளவில் சுமார் 30 மாணவர்கள் மையத்தில் படித்துக் கொண்டிருந்தபோது தரைத்தளத்திற்குள் மழை நீர் புகுந்துள்ளது. தகவலறிந்து அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரில் தத்தளித்த மாணவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் துரதிஷ்டவசமாக 2 தானியா சோனி (25), ஸ்ரேயா யாதவ் (25) ஆகிய இரண்டு மாணவிகளும், நெவின் டால்வின் (28) என்ற மாணவரும் உயிரிழந்தனர். மாணவர்கள் நீரில் சிக்கியது, வெளியேறியது, தீயணைப்பு வீரர்கள் அவர்களை மீட்க்கப் போடுவது உள்ளிட்ட வீடியோக்கள் அடுத்தடுத்து வெளியாகியுள்ளன.

 

மாநகராட்சியின் கவனக்குறைவாலேயே இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டதாக சக மாணவர்கள் இரவு முழுவதும் போரட்டம் நடத்தினர். போலீசார் பேச்சுவார்த்தையில் சமாதானம் ஏற்படாத நிலையில் அவர்கள் துண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டனர்.

இதற்கிடையில் இந்த விவகாரத்தில் பயிற்சி மையத்தின் உரிமையாளரான அபிஷேக் குப்தா மற்றும் ஒருங்கிணைப்பாளர் தேஷ்பால் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கட்டிட அடித்தளங்களில் நூலகம் அமைக்கக்கூடாது என்ற விதி இருந்தும் சட்டவிரோதமாக அங்கு நூலகம் இயங்கி வந்துள்ளது. எனவே ரவு கோச்சிங் சென்டர் உட்பட அதுபோன்று டெல்லியில்  தரைதளத்தைச் சட்டவிரோதமாக பயன்படுத்திவந்த 13 சிவில் சர்விஸ் கோச்சிங் சென்டர்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். 

Tags:    

Similar News