இந்தியா (National)

வெடிகுண்டு மிரட்டலுக்கு உடந்தை.. 'எக்ஸ்' தளத்தின் மீது குற்றம்சாட்டும் மத்திய அரசு

Published On 2024-10-23 09:37 GMT   |   Update On 2024-10-23 09:37 GMT
  • இண்டிகோ, விஸ்தாரா, ஏர் இந்தியா, ஸ்பைஸ்ஜெட் மற்றும் ஆகாசா ஏர் விமானங்களுக்கு மிரட்டல் வந்தது.
  • ஒரு வாரத்தில் மட்டும் விமான நிறுவனங்களுக்கு ரூ. 500 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது

நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக இந்திய விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை சுமார் 200 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இண்டிகோ, விஸ்தாரா, ஏர் இந்தியா, ஸ்பைஸ்ஜெட் மற்றும் ஆகாசா ஏர் உள்ளிட்ட முக்கிய இந்திய விமான நிறுவனங்கள் வெடிகுண்டு மிரட்டல்களால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் விமான நிறுவனங்களுக்கு ரூ. 500 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வெடிகுண்டு மிரட்டல்களுக்கு துணை போவதாக பிரபல சமூக வலைத்தளமான எக்ஸ் மீது மத்திய அரசு குற்றம்சாட்டியுள்ளது. எக்ஸ் தளத்தில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர்களின் யூசர் ஐடி மற்றும் டொமைன் தொடர்பான தகவல்களை போலீஸ் கோரியுள்ளது.

ஆனால் தளத்தில் தனிநபர் உரிமைகள் காரணமாக அந்த தகவல்களைத் தர மறுத்துள்ளது எக்ஸ். இந்த தளத்தின் வாயிலாகவே பல வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளன. குறிப்பாக @adamlanza111, @psychotichuman and @schizobomer777 ஆகிய மூன்று ஐடிகள் இதில் தொடர்பு கொண்டுள்ளதை போலீஸ் கண்டறிந்துள்ளது. ஆனால் அந்த ஐடிகளை குறித்து மேலதிக தகவல்களை எக்ஸ் தர மறுக்கும் சூழலில்தான் மத்திய அரசு இந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளது.

மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் கீழ் விமான நிறுவன பிரதிநிதிகள் மற்றும் சமூக வலைதள பிரதிநிதிகளை ஒருங்கிணைத்து நடத்தப்பட்ட கூட்டத்தில் இந்த குற்றச்சாட்டை அரசு தெரிவித்துள்ளது. எக்ஸ் தளத்தில் இந்த போக்கு குற்றத்துக்கு உடந்தையாகக் கருதப்படும் என்றும் மத்திய அரசு எச்சரித்துள்ளது.

Tags:    

Similar News