இந்தியா (National)

சிறப்பு மண்டபம் அமைத்து ஏரியின் நடுவில் நடந்த ஆடம்பர திருமணம்

Published On 2024-08-30 02:23 GMT   |   Update On 2024-08-30 03:11 GMT
  • மணப்பெண் ஹரிதா ஏரியின் நடுவில் தனது திருமணத்தை நடத்த விரும்பினார்.
  • திருமணத்தின்போது கேரள பாரம்பரிய முறைப்படி அலங்கரிக்கப்பட்ட படகில் மணமக்கள் அழைத்து வரப்பட்டனர்.

திருவனந்தபுரம்:

சுற்றுலா பயணிகளுக்கு சொர்க்க பூமியாக கேரளா விளங்குகிறது என்றே கூறலாம். இங்கு அரசுக்கு அதிக அளவில் வருவாயை ஈட்டி தருவதில் மலைவாசஸ் தலங்களும், நீர்நிலைகளும் முக்கிய பங்காற்றி வருகின்றன. குறிப்பாக ஏரிகளில் நடத்தப்படும் படகு சவாரி சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும்.

அதுவும் ஹவுஸ் போட் எனப்படும் மேற்கூரையுடன் கூடிய குடும்ப படகு பயணத்தையும் விரும்புவார்கள். அந்த வகையில் ஹவுஸ் போட் சுற்றுலா கேரளாவில் ஆலப்புழை மாவட்டத்தில் கொடி கட்டி பறக்கிறது. இங்குள்ள ஏரிகளில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட படகுகள் சுற்றுலா பயணிகளின் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள், ஹவுஸ் போட்களில் சில நேரங்களில் கேளிக்கை விருந்துகள் நடத்துவதும் உண்டு. அந்த வகையில் சமீபத்தில் ஆலப்புழை கைநகரி ஏரியில் நடந்த ஆடம்பர திருமணம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இதுகுறித்து சுற்றுலாத்துறை மந்திரி முகமது ரியாஸ் புகைப்படங்களுடன் அது தொடர்பான தகவல்களை முகநூலில் பதிவிட்டுள்ளார். அந்த திருமண புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

அதாவது டெல்லி போலீசில் தடயவியல் நிபுணராக பணி செய்து வருபவர் ஹரிதா (வயது 25). இவர் ஆலப்புழை புன்னமடை காயலில் ஆண்டுதோறும் நடைபெறும் படகு போட்டியில் பெண்கள் அணியின் கேப்டன் என்ற முறையில் பங்கேற்று வருகிறார். இவருக்கும், சாலக்குடியை சேர்ந்த ஹரிநாத் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதில் மணப்பெண் ஹரிதா ஏரியின் நடுவில் தனது திருமணத்தை நடத்த விரும்பினார். இதற்காக மாவட்ட கலெக்டரின் அனுமதியை பெற்றார்.

பின்னர் பிரத்யேகமாக திருமணம் நடத்த மண்டபம் மற்றும் கலைநிகழ்ச்சி, விருந்துகளை தடபுடலாக நடத்த ஒரு சிறிய மண்டபம் போன்று ஏரியில் செட் அமைக்கப்பட்டிருந்தது. திருமணத்தின்போது கேரள பாரம்பரிய முறைப்படி அலங்கரிக்கப்பட்ட படகில் மணமக்கள் அழைத்து வரப்பட்டனர். பின்னர் அங்கு அமைக்கப்பட்ட மண்டபத்தில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்தில் மணமக்களின் குடும்பத்தினர், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உள்பட 700-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஏரியின் நடுவில் நடந்த திருமணம் அனைவரையும் கவர்ந்தது.

Tags:    

Similar News