இந்தியா

வயநாட்டில் ராணுவத்தினர் அமைத்த தற்காலிக பாலங்கள் சேதம்

Published On 2024-08-06 09:25 GMT   |   Update On 2024-08-06 09:25 GMT
  • பாலம் முழுமையான சேதமானதால் நடந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • மீட்பு பணிகள் முடியாத நிலையில் பாலங்கள் சேதமானதால் மீட்பு பணிகளில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது.

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு கேரள மாநில மக்கள் மட்டுமின்றி, நாடு முழுவதும் உள்ள அனைவரையும் கவலையடைய செய்திருக்கிறது. அங்கு மீட்பு பணி இன்று 8-வது நாளாக தொடர்ந்து வருகிறது.

பலி எண்ணிக்கை 400-ஐ தாண்டிய நிலையில், 200-க்கும் மேற்பட்டவர்கள் மாயமாகியிருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்கள் உள்ளிட்ட மீட்பு குழுவினர் மிகவும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்து வருகிறார்கள்.

சூரல்மலை-முண்டகை இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால், பொக்லைன் உள்ளிட்ட கனரக வாகனங்கள் ஆற்றை கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் மீட்பு பணியை துரிதப்படுத்தும் வகையில் ஆற்றின் குறுக்கே ராணுவத்தினர் பெய்லி பாலம் அமைத்தனர். இதன் மூலம் சூரல்மலை-முண்டகை இடையே மீட்பு பணிக்காக வாகனங்கள் சென்று வந்தன.

இந்நிலையில் நிலச்சரிவு பாதித்த வயநாட்டில் மீட்பு பணிக்காக ராணுவம் அமைத்த தற்காலிக பாலம் சேதமடைந்துள்ளது. பாலம் முழுமையான சேதமானதால் நடந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

வாகனம் செல்வதற்காக அமைக்கப்பட்ட பாலத்தில் சீரமைப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

மீட்பு பணிகள் முடியாத நிலையில் பாலங்கள் சேதமானதால் மீட்பு பணிகளில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News