இந்தியா

இலங்கை கடற்படை கப்பல் மோதி தமிழக மீனவர் உயிரிழப்பு: வெளியுறவுத்துறை கண்டனம்

Published On 2024-08-01 10:35 GMT   |   Update On 2024-08-01 10:35 GMT
  • கார்த்திகேயன் விசைப்படகு மீது இலங்கை ரோந்துப் படகு மோதியது.
  • இதனால் அந்தப் படகு நடுக்கடலில் மூழ்கி மீனவர் மலைச்சாமி உயிரிழந்தார்.

புதுடெல்லி:

ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து சுமார் 400 விசைப்படகுகளில் 2,000-த்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று கடலுக்குச் சென்றனர். நேற்று இரவு மீனவர்கள் கச்சத்தீவு கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படை ரோந்து வந்துது.

அவர்களைக் கண்டதும் கைது நடவடிக்கைக்கு அஞ்சி மீனவர்கள் விசைப்படகுகளை கரைகளை நோக்கி திருப்பினர். அப்போதும் விடாமல் இலங்கை கடற்படையினர் ரோந்துப் படகில் அவர்களை துரத்திச் சென்றனர்.

இதில் கார்த்திகேயன் என்பவரின் விசைப்படகு மீது இலங்கை ரோந்துப் படகு மோதியது. இதனால் கார்த்திகேயனின் படகு நடுக்கடலில் மூழ்கி மீனவர் மலைச்சாமி உயிரிழந்தார். முத்து முனியாண்டி, மூக்கையா ஆகியோர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். மாயமான ராமச்சந்திரன் என்ற மற்றொரு மீனவரி மீட்கும் பணி நடந்துவருகிறது.

இந்நிலையில், இலங்கை கடற்படையினரின் அத்துமீறிய செயலால் தமிழக மீனவர் உயிரிழந்ததற்கு மத்திய வெளியுறவுத்துறை கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக டெல்லியில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகளை நேரில் அழைத்து சம்மன் அளித்த வெளியுறவுத்துறை, இலங்கை கடற்படையினரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News