மரங்களை வேரோடு பிடுங்கியபடி ஊருக்குள் வெள்ளம் பாய்ந்தது- உயிர் தப்பிய வியாபாரி பேட்டி
- நாங்கள் தூங்குவதற்கு முன்பாக இடியுடன் கூடிய மழை பெய்தது.
- எனது பக்கத்து வீட்டை சேர்ந்தவர்களை வீட்டிலிருந்து வெளியே வருமாறு அழைத்தேன்.
வயநாடு:
வயநாடு நிலச்சரிவில் சூரல்மலா கிராமத்தை சேர்ந்த லாட்டரி வியாபாரி பொன்னையன் என்பவர் நிலச்சரிவில் சிக்காமல் குடும்பத்துடன் உயிர்த்தப்பினார்.
எனது வீட்டின் அருகே நடு இரவில் ஒரு பெரிய மரம் சாய்ந்து விழுந்தது. சத்தம் கேட்டு நான் என்னுடைய குடும்பத்துடன் வீட்டை விட்டு வெளியேறினேன். என்னுடைய மனைவி ஜிசா மற்றும் மகன்கள் ஸ்ரீராக், விகாஸ் ஆகியோருடன் என்னுடைய லாட்டரி கடைக்கு வந்தேன்.
நாங்கள் தூங்குவதற்கு முன்பாக இடியுடன் கூடிய மழை பெய்தது. இடைவிடாத மழை பெய்ததால் அசம்பாவிதம் நடக்கலாம் என மனதிற்குள் தோன்றியது.
இதனால் எனது பக்கத்து வீட்டை சேர்ந்தவர்களை வீட்டிலிருந்து வெளியே வருமாறு அழைத்தேன். அவர்கள் வரவில்லை. கடையில் குடும்பத்துடன் தங்கி இருந்த நான் நள்ளிரவில் எழுந்து பார்த்தேன்.
வெளியில் கனமழை பெய்தது. காலையில் கடை ஷட்டரை உயர்த்த முயற்சித்தேன். அப்போது சேற்று நீர் உள்ளே வர ஆரம்பித்தது. சட்டர்களை உடனே இறக்கிவிட்டு கடையின் கூரையின் மீது மனைவி குழந்தைகளுடன் ஏரி அமர்ந்து கொண்டோம்.
அப்போது அருகில் இருந்த ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. மரங்களை வேரோடு பிடுங்கிக் கொண்டு வெள்ளம் ஊருக்குள் பாய்ந்து கொண்டிருந்தது. இதனை கண்டதும் பதறினோம்.
உதவிக்காக சத்தமாக அழுதேன். ஆனால் அருகில் யாரும் இல்லை. அவர்கள் பலியாகி விட்டனர். உயரமான இடத்திற்கு சென்றதால் குடும்பத்துடன் தப்பித்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.