மகாராஷ்டிரா, குஜராத்திற்கு ரெட் அலர்ட் விடுத்த இந்திய வானிலை ஆய்வு மையம்
- காற்றழுத்த தாழ்வு பகுதி பூரி, கோபால்பூர் மற்றும் பாரதீப் ஆகிய பகுதிகளுக்கு அருகில் நிலை கொண்டுள்ளது.
- தெலுங்கானா, மத்திய மகாராஷ்டிரா, கடலோர கோவா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி செவ்வாய்க்கிழமை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி ஒடிசாவை நோக்கி நகர்ந்தது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி பூரி, கோபால்பூர் மற்றும் பாரதீப் ஆகிய பகுதிகளுக்கு அருகில் நிலை கொண்டுள்ளது. மேலும் வடமேற்கு-மேற்கு பகுதிகளை நோக்கி மெதுவாக நகர்கிறது.
இன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வடமேற்கு நோக்கி நகர்ந்து ஒடிசா கடற்கரையை பூரிக்கு அருகில் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்பிறகு மேற்கு-வடமேற்கு நோக்கி ஒடிசா - சத்தீஸ்கர் முழுவதும் நகர்ந்து படிப்படியாக வலுவிழக்கும்.
காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தெலுங்கானா, மத்திய மகாராஷ்டிரா, கடலோர கோவா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஒடிசா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், கடலோர ஆந்திரா, கட்ச் மற்றும் சவுராஷ்டிரா ஆகிய பகுதிகளில் இன்றும் நாளையும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.