இந்தியா

கேரளாவில் 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை- விமான சேவை பாதிப்பு

Published On 2024-06-09 04:45 GMT   |   Update On 2024-06-09 04:45 GMT
  • திருவனந்தபுரத்தில் விடாமல் பெய்த மழையின் காரணமாக சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
  • திருச்சூர் மற்றும் மலப்புரம் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்:

கேரளாவில் தற்போது தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இந்த மழை தீவிரம் அடைந்துள்ளதன் காரணமாக நேற்று மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.

திருவனந்தபுரத்தில் விடாமல் பெய்த மழையின் காரணமாக சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் வாகனங்கள் செல்ல சிரமப்பட்டதால் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டது.

இந்த நிலையில் கனமழை காரணமாக கோழிக்கோடு விமான நிலையத்தில் செல்லும் 5 விமானங்கள் கொச்சிக்கு திருப்பி விடப்பட்டன. துபாயில் கோழிக்கோடு வந்த விமானம் அதிகாலை 2.45 மணிக்கு கொச்சியில் தரை இறங்கியது. இதேபோல் தோஹா, சார்ஜா, பக்ரைன் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கோழிக்கோடு வந்த விமானங்களும் கொச்சிக்கு திருப்பி விடப்பட்டன.

இந்த நிலையில் மழையின் தாக்கம் மேலும் அதிகமாகும் என்பதால் கோழிக்கோடு, வயநாடு, பத்தனம்திட்டா, கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர் மற்றும் மலப்புரம் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வருகிற 12-ந் தேதி மழையின் தீவிரம் இருக்கும் என்பதால், பல்வேறு மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே திருவனந்தபுரம் அருவிக்கரை அணையின் ஷட்டர்கள் 25 செ.மீட்டர் உயர்த்தப் பட்டதால், ஆறுகளில் அதிக அளவு தண்ணீர் செல்கிறது.

எனவே நீர் நிலைகளின் கரையோரம் வசிப்பவர்கள் பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்ல கேரள பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

Tags:    

Similar News