இந்தியா

60 ஆண்டுகளுக்கு பிறகு கம்போடியா மன்னர் 29-ந் தேதி இந்தியா வருகிறார்

Published On 2023-05-27 03:08 GMT   |   Update On 2023-05-27 03:37 GMT
  • ஜனாதிபதி திரவுபதி முர்மு அழைப்பின்பேரில், மன்னர் நாரோடம் சிஹாமோனி வருகிறார்.
  • கடைசியாக, 2010-ம் ஆண்டு, இந்திய ஜனாதிபதியாக இருந்த பிரதீபா பட்டீல் கம்போடியா சென்றுள்ளார்.

புதுடெல்லி:

கம்போடியா மன்னர் நாரோடம் சிஹாமோனி, 3 நாட்கள் பயணமாக 29-ந் தேதி இந்தியா வருகிறார். கம்போடியா மன்னர் ஒருவர், இந்தியா வருவது கடந்த 60 ஆண்டுகளில் இதுவே முதல்முறை.

கடைசியாக, கடந்த 1963-ம் ஆண்டு, தற்போதைய மன்னரின் தந்தையான மன்னர் நாரோடம் சிஹானோக் இந்தியா வந்தார்.

ஜனாதிபதி திரவுபதி முர்மு அழைப்பின்பேரில், மன்னர் நாரோடம் சிஹாமோனி வருகிறார். அவர் 30-ந் தேதி இந்தியாவில் தனது அலுவல்களை தொடங்குகிறார்.

அன்று காலை, ஜனாதிபதி மாளிகையில் அவருக்கு பாரம்பரிய அணிவகுப்பு மரியாதை அளிக்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து அவர் ராஜ்காட் சென்று மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார்.

ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி ஆகியோருடன் கம்போடிய மன்னர் பேச்சுவார்த்தை நடத்துகிறார். அவரை மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சந்திக்கிறார்.

 ஜனாதிபதி மாளிகையில் கம்போடிய மன்னருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு விருந்து அளிக்கிறார்.

மன்னருடன் அரண்மனை மந்திரி, செனட் துணைத்தலைவர், வெளியுறவுத்துறை மந்திரி உள்பட 27 பேர் அடங்கிய உயர்மட்டக்குழுவும் வருகிறது. இந்தியா-கம்போடியா இடையிலான தூதரக உறவு, 70 ஆண்டுகளை எட்டி இருப்பதால், இந்த பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.

இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்த இப்பயணம் ஒரு வாய்ப்பாக அமையும் என்று மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் சவுரவ் குமார் தெரிவித்தார்.

கடைசியாக, 2010-ம் ஆண்டு, இந்திய ஜனாதிபதியாக இருந்த பிரதீபா பட்டீல் கம்போடியா சென்றுள்ளார். அதற்கு முன்பு, 1959-ம் ஆண்டு, ராஜேந்திர பிரசாத் சென்றுள்ளார்.

Tags:    

Similar News