இந்தியா

ஆந்திராவில் மது கடைகள் தனியார் மயமாகிறது... ஆண்டுக்கு ரூ.2 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும்

Published On 2024-08-30 04:40 GMT   |   Update On 2024-08-30 04:40 GMT
  • தெலுங்கானாவில் தனியார் வசம் உள்ள மதுபான கடைகள் மூலம் அரசுக்கு அதிக அளவில் வருவாய் கிடைப்பது தெரியவந்தது.
  • செப்டம்பர் மாத இறுதியில் ஆன்லைன் மூலம் மதுபான கடைகள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளன.

திருப்பதி:

ஆந்திராவில் கடந்த 2017-ம் ஆண்டில் சந்திரபாபு நாயுடு ஆட்சியின் போது மதுபான கடைகள் தனியார் வசம் இருந்தது.

அதன் பிறகு ஆட்சிக்கு வந்த முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி மதுபான கடைகளை அரசு மதுகடைகளாக மாற்றினார்.

சந்திரபாபு நாயுடு முதல் மந்திரியாக பொறுப்பேற்ற பிறகு புதிய மதுபான கொள்கைகளை அமல்படுத்த முடிவு செய்தார்.

அதன்படி கலால் துறை அதிகாரிகள் தமிழ்நாடு, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட 6 மாநிலங்களில் மதுபான கொள்கை குறித்து ஆய்வு செய்து அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தனர்.

அதில் தெலுங்கானாவில் தனியார் வசம் உள்ள மதுபான கடைகள் மூலம் அரசுக்கு அதிக அளவில் வருவாய் கிடைப்பது தெரியவந்தது.

இதனால் தெலுங்கானா மதுபான கொள்கையை பின்பற்ற முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

அதன்படி செப்டம்பர் மாத இறுதியில் ஆன்லைன் மூலம் மதுபான கடைகள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளன.

மதுபான கடைக்கு விண்ணப்பம் செய்ய ரூ.2 லட்சம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கடைக்கும் 40 விண்ணப்பங்கள் வரை வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.2000 கோடி வருவாய் கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த ஆட்சியில் அரசு மதுபான கடை என்பதால் அருகில் பார் வைக்க அனுமதி கொடுக்கவில்லை. இதனால் மது குடிப்பவர்கள் சாலைகளில் மது குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்டு வந்தனர்.

தற்போது மதுக்கடைகள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட உள்ளதால் மது கடையுடன் கூடிய பார் அமைத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட உள்ளதாக ஆந்திர மாநில கலால் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

Tags:    

Similar News