இந்தியா

மோடி ஆட்சி வினாத்தாள் கசிவு மையமாக மாறிவிட்டது- ராகுல்காந்தி

Published On 2024-06-18 10:35 GMT   |   Update On 2024-06-18 10:39 GMT
  • நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமையும், மத்திய அரசும் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜூலை 8ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
  • எதிர்காலத்துடன் விளையாடும் விவகாரத்தில் நரேந்திர மோடி எப்போதும் போல் மவுனம் சாதித்து வருகிறார்.

இந்த ஆண்டு நடத்தப்பட்ட இளங்கலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வில் வினாத்தாள் கசிந்ததை எதிர்த்தும், முறைகேடுகள் நடந்ததை எதிர்த்தும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடத்தப்பட்டு வருகிறது.

இந்த வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், "நீட் நுழைவுத் தேர்வில் 0.001% அலட்சியம்கூட இருக்கக்கூடாது. அதுபோன்ற அலட்சியம் இருப்பதாக தெரியவந்தால் அதனை உடனடியாக சரி செய்ய வேண்டும்" என்று தெரிவித்தனர். மேலும், வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகள் தொடர்பாக நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமையும், மத்திய அரசும் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜூலை 8ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இந்நிலையில் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

நீட் தேர்வில் 24 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடும் விவகாரத்தில் நரேந்திர மோடி எப்போதும் போல் மவுனம் சாதித்து வருகிறார்.

பீகார், குஜராத் மற்றும் ஹரியானாவில் நடந்த கைதுகள், நீட் தேர்வில் ஊழல் நடைபெற்று இருப்பதை தெளிவாகக் காட்டுகின்றன, மேலும் இந்த பாஜக ஆட்சியில் மாநிலங்கள் வினாத்தாள் கசிவின் மையமாக மாறிவிட்டன.

வினாத்தாள் கசிவதைத் தடுக்க கடுமையான சட்டங்கள் இயற்றப்படும் என்றும் அதன் மூலம் இளைஞர்களின் எதிர்காலம் பாதுகாக்கப்படும் என்றும் நாங்கள் எங்கள் தேர்தல் அறிக்கையில் உத்தரவாதம் அளித்துள்ளோம்.

எதிர்க்கட்சிகளின் பொறுப்பை நிறைவேற்றி, நாடு முழுவதும் உள்ள இளைஞர்களின் குரலை தெருமுனை முதல் பாராளுமன்றம் வரை வலுவாக எழுப்பி, அரசுக்கு அழுத்தம் கொடுத்து, இதுபோன்ற கடுமையான கொள்கைகளை வகுப்பதில் உறுதியாக உள்ளோம்.

என்று கூறியுள்ளார்.

Tags:    

Similar News