இந்தியா

நிர்மலா சீதாராமன் தலைமையில் வரும் 22-ம் தேதி ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்

Published On 2024-06-13 08:53 GMT   |   Update On 2024-06-13 09:49 GMT
  • ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் ஜூன் 22-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி 52-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடைபெற்றது.

புதுடெல்லி:

நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு முறையைக் கொண்டு வரும் நோக்கில் கடந்த 2017, ஜூலை 1-ம் தேதி புதிய சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) அறிமுகம் செய்யப்பட்டது. இதைக் கண்காணிக்கவும், வட்டி நிர்ணயம் தொடர்பான முடிவுகளை எடுக்கவும் ஜி.எஸ்.டி. கவுன்சில் அமைக்கப்பட்டது.

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஜி.எஸ்.டி. கவுன்சிலின் தலைவர் ஆவார். அனைத்து மாநிலங்களின் நிதி மந்திரிகளும் இதில் உறுப்பினர்களாக உள்ளனர்.

கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி 52-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடைபெற்றது.

இதற்கிடையே, பாராளுமன்ற தேர்தல் முடிவு வெளியாகி பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சி பொறுப்பேற்றது. நிதி மந்திரியாக நிர்மலா சீதாராமன் மீண்டும் பதவியேற்றார்.

இந்நிலையில், 53-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் புதுடெல்லியில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News