ஆந்திரா, தெலுங்கானாவில் தக்காளி கிலோ ரூ.100 ஆக உயர்வு- மீண்டும் கோடீஸ்வரர்கள் கனவில் விவசாயிகள்
- எப்போதும் கிலோ கணக்கில் வாங்கும் பொதுமக்கள் தற்போது அரை கிலோ வரை மட்டுமே தக்காளி வாங்கி செல்கின்றனர்.
- ஓட்டல்களில் தக்காளி சட்னி நிறுத்தப்பட்டுள்ளது.
ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் கடந்த ஆண்டு தக்காளி விலை ரூ.200 வரை உயர்ந்தது. இதனால் தக்காளி வியாபாரிகள், விவசாயிகள் பலர் கோடீஸ்வரர்களாக மாறினார்கள்.
தக்காளிக்காக கொலை, கொள்ளையும் நடந்தன. இந்த நிலையில் தற்போது தக்காளி மீண்டும் விலை உயர தொடங்கியுள்ளது. கடந்த வாரத்தில் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் கிலோ ரூ.50 முதல் 60 வரை விற்பனை செய்யப்பட்டன. தற்போது கிலோ ரூ. 100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆந்திர மாநிலம் சித்தூர் நெல்லூர் மற்றும் மகாராஷ்டிரா மாநில பகுதிகளில் இருந்து இந்த 2 மாநிலங்களிலும் தக்காளி வினியோகம் செய்யப்படுகிறது. தற்போது மழை மற்றும் விளைச்சல் குறைவு காரணமாக தற்காளி வரத்து குறைந்துள்ளது.
இதனால் தக்காளி விலை உயர்வு சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. கடந்த ஆண்டை போல தக்காளி விலை உயரும். லட்சாதிபதி கோடீஸ்வரர்களாக மாறலாம் என்று கனவில் விவசாயிகள், வியாபாரிகள் தக்காளி உற்பத்தி மற்றும் வியாபாரத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.
விலை உயர்வால் நடுத்தர வர்க்கத்தினர் தக்காளி பயன்படுத்துவதை குறைத்து வருகின்றனர். எப்போதும் கிலோ கணக்கில் வாங்கும் பொதுமக்கள் தற்போது அரை கிலோ வரை மட்டுமே தக்காளி வாங்கி செல்கின்றனர்.
ஓட்டல்களில் தக்காளி சட்னி நிறுத்தப்பட்டுள்ளது.