இந்தியா (National)

ஜி.எஸ்.எல்.வி. எப்-14 ராக்கெட் பிப்ரவரி 17ம் தேதி விண்ணில் செலுத்தப்படும்: இஸ்ரோ தகவல்

Published On 2024-02-08 15:04 GMT   |   Update On 2024-02-08 15:04 GMT
  • காலநிலை தரவுகளை அறிந்து கொள்ள இன்சாட்-3டிஎஸ் என்ற செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது.
  • பேரழிவு எச்சரிக்கை அமைப்புக்கான தரவுகளை வழங்குவதுடன், முன்கூட்டியே எச்சரிக்கை அளிக்கும் திறன் கொண்டது.

புதுடெல்லி:

வானிலை முன் அறிவிப்பு தகவல்கள் அடங்கிய காலநிலை தரவுகளை அறிந்துகொள்வதற்காக 'இன்சாட்-3டிஎஸ்' என்ற செயற்கைக் கோளை இஸ்ரோ பெங்களூருவில் வடிவமைத்துள்ளது.

இந்நிலையில், இந்த செயற்கைக்கோளை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் தயார் நிலையில் உள்ள ஜி.எஸ்.எல்.வி. எப்-14 ராக்கெட்டில் பொருத்தி, பிப்ரவரி 17ம் தேதி மாலை 5.30 மணிக்கு விண்ணில் செலுத்த இஸ்ரோ தயாராகி வருகிறது.

காலநிலை தரவுகளைத் தெரிந்து கொள்வதற்காக தற்போதுள்ள சுற்றுப்பாதையில் இன்சாட்-3டி மற்றும் 3 டி.ஆர். செயற்கைக் கோள்கள் சேவைகளை தொடர்ந்து வழங்கி வருகிறது.

இன்சாட்-3 டி.எஸ். செயற்கைக்கோள் மேம்படுத்தப்பட்ட வானிலை ஆய்வுகளை வழங்குவதுடன் வானிலை முன் அறிவிப்பு திறன்களை அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோளில் அதிநவீன கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. குறிப்பாக 6 சேனல் இமேஜர் மற்றும் 19 சேனல் சவுண்டர் கருவிகள் வானிலை ஆய்வுகளுக்காகவும், உயர்தர தரவுகளை சேகரிப்பதற்காகவும் அனுப்பப்படுகிறது.

இந்த செயற்கைக்கோள், 'டேட்டா ரிலே டிரான்ஸ்பாண்டர்' (டி.ஆர்.டி) போன்ற அத்தியாவசிய தகவல் தொடர்பு கருவிகளைக் கொண்டுள்ளது. இந்த கருவி தானியங்கி தரவு சேகரிப்பு தளங்கள் மற்றும் தானியங்கி வானிலை நிலையங்களில் இருந்து தரவுகளையும் பெறுகிறது. இன்சாட் 3 டி.எஸ். செயற்கைகோளில் தகவல் தொடர்பு அம்சங்களுடன், நிலம் மற்றும் கடல் பரப்புகளை கண்காணிக்கும் வகையில் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

இதுதவிர பேரழிவு எச்சரிக்கை அமைப்புகளுக்கான தரவுகளை வழங்குவதுடன், முன்கூட்டியே எச்சரிக்கை அளிக்கும் திறன்களையும் கொண்டுள்ளது.

Tags:    

Similar News