இந்தியா (National)

திருப்பதியில் விஐபி தரிசன டிக்கெட் முறைகேடு- ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் மீது வழக்கு பதிவு

Published On 2024-10-21 04:56 GMT   |   Update On 2024-10-21 06:01 GMT
  • தங்களிடம் 65 ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொண்டு டிக்கெட் வாங்கி கொடுத்ததாக சாய் குமார் தெரிவித்தார்.
  • ஜாகியா கானம் பொருளாதார ரீதியாக பலனடைந்தாரா என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

திருப்பதி:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வததற்காக பெங்களூருவைச் சேர்ந்த சாய்குமார் என்பவர் தனது குடும்ப உறுப்பினர்கள் 4 பேருடன் 'விஐபி பிரேக்' தரிசன வரிசையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அவர் வைத்திருந்த தரிசன டிக்கெட்டை வாங்கி பார்த்த ஊழியர்களுக்கு, சந்தேகம் ஏற்பட்டது. இதுபற்றி தேவஸ்தான விஜிலென்ஸ் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்துவந்த விஜிலென்ஸ் அதிகாரிகள், இது பற்றி சாய்குமாரிடம் விசாரணை நடத்தினர்.

அதில், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆந்திர சட்டசபை மேலவை துணைத்தலைவர் மாயண்ணா ஜாகியா கானம் என்பவர் பரிந்துரை அடிப்படையில், அவரது செய்தி தொடர்பாளர் கிருஷ்ணதேஜா, மற்றொரு நபரான சந்திர சேகர் ஆகியோர், தங்களிடம் 65 ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொண்டு டிக்கெட் வாங்கி கொடுத்ததாக சாய் குமார் தெரிவித்தார்.

இதுபற்றி தேவஸ்தான விஜிலென்ஸ் துறையினர் அளித்த புகாரின்பேரில், மேல்சபை துணைத்தலைவர் ஜாகியா கானம் உட்பட 3 பேர் மீதும் திருமலை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த முறைகேடு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த விவகாரத்தில் சட்ட சபை மேல்சபை துணைத்தலைவர் ஜாகியா கானம் பொருளாதார ரீதியாக பலனடைந்தாரா என்ற கோணத்திலும் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அதுமட்டுமின்றி, அவருடைய பரிந்துரை அடிப்படையில் இதற்கு முன்னர் 'விஐபி பிரேக்' தரிசன டிக்கெட் வாங்கி ஏழுமலையானை வழிபட்ட பக்தர்களிடம் விசாரணை நடத்தவும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News