புதுச்சேரி

பட்டாலியன் போலீஸ் மையம் அமைக்க எதிர்ப்பு- மீனவ கிராம மக்கள் மறியல்

Published On 2024-09-11 09:33 GMT   |   Update On 2024-09-11 09:33 GMT
  • பொது மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, பட்டாலியன் மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பேசினார்.
  • நரம்பை கிராம மீனவமக்கள், அவர்களை ஊருக்குள் நுழைய விடாமல் தடுத்த நிறுத்தி, ஊர் முழுவதும் கருப்பு கொடி கட்டி மறியலில் ஈடுபட்டனர்.

பாகூர்:

புதுவை இந்திய ரிசர்வ் பட்டாலியன் படை பிரிவுக்கு, கிருமாம்பாக்கம் அருகே உள்ள நரம்பை மீனவ கிராமத்தில் கடந்த 2003-ம் ஆண்டு சுமார் 96 ஏக்கர் நிலம் கையப்படுத்தப்பட்டது.

இதில், ஐ.ஆர்.பி.என். பட்டாலியன் போலீசாருக்கு, தலைமையகம், குடியிருப்புகள், பயிற்சி மையம் உள்ளிட்டவைகள் அமைக்க திட்டமிடப்பட்டு இருந்தது.

இந்த திட்டத்திற்கு, நரம்பை மீனவ கிராம மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இது தொடர்பாக அவர்கள் பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

இருப்பினும் அதனையெல்லாம் மீறி, பட்டாலியன் போலீசார் டெண்ட் கொட்டகை அமைத்து கண்காணித்து வந்தனர். இதனிடையே அப்போது பதவியில் இருந்த அமைச்சர், மீனவ கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று, அவர்களுக்கு ஆதரவாக வலியுறுத்தி வந்தார்.

இது தொடர்பாக கவர்னர், போலீஸ் உயர் அதிகாரிகள், பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும், மீனவ மக்கள் ஒத்துழைப்பு அளிக்கவில்லை. ஆளும் கட்சி, எதிர் கட்சி என அரசியல் கட்சிகள் தேர்தலின் போது, நரம்பை கிராமத்தில் பட்டாலியன் மையம் வராது என வாக்குறுதி அளித்திருந்தனர்.

இந்நிலையில் சுமார் பல ஏக்கர் நிலம் சுற்றுலா துறைக்கும், உண்டு உறைவிடப்பள்ளி திட்டத்திற்காகவும் ஒதுக்கப்பட்டது. மீதமிருந்த இடத்தை நரம்பை கிராம மக்களின் எதிர்கால தேவைக்காக பயன்படுத்தி கொள்ள அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். இதனால் பட்டாலியன் படை கட்டுமான பணி கைவிடப்பட்டது என நம்பி இருந்தனர்.

இந்நிலையில் புதுவை பட்டாலியன் போலீசார், அந்த இடத்தில் கட்டுமான பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டிருந்த நிலையில், அதற்கான ஆய்வு பணிகளை மேற்கொள்ள, துணை கமாண்டன்ட் சுபாஷ், உதவி கமாண்டண்ட் ரிஸ்வா சந்திரன், செந்தில் முருகன், ராஜேஸ் மற்றும் பட்டாலியன் அதிகாரிகள் இன்று காலை நரம்பை கிராமத்திற்கு வந்தனர்.

இதனையறிந்த, நரம்பை கிராம மீனவமக்கள், அவர்களை ஊருக்குள் நுழைய விடாமல் தடுத்த நிறுத்தி, ஊர் முழுவதும் கருப்பு கொடி கட்டி மறியலில் ஈடுபட்டனர். அப்போது, போலீசாருக்கும், மீனவ கிராம மக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் பதட்டமாக காணப்பட்டது. இந்த போராட்டத்தில் சுமார் 400-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த ஏம்பலம் தொகுதி எம்.எல்.ஏ. லட்சுமிகாந்தன் சம்பவ இடத்திற்கு சென்று, பொது மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, பட்டாலியன் மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பேசினார்.

இதனால் எம்.எல்.ஏ.வுக்கும், பட்டாலியன் பிரிவு அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ., முதல்-அமைச்சர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார்.

இதையடுத்து, பட்டாலியன் போலீசார் ஆய்வு பணிகளை மேற்கொள்ளாமல் திரும்பினர். தொடர்ந்து, லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ., மீனவ மக்களிடம் பேசியதாவது:-

கடந்த பட்ஜெட்டில் கூட, முதல்-அமைச்சர் ரங்கசாமி, இங்கு கடல் சார் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் என அறிவித்தார். சுற்றுலா திட்டம், மீன் வளம் துறையின் மூலமாக வளர்ச்சி திட்டங்களை மேற்கொள்ள இருந்தது.

இந்த பிரச்சினை மீண்டும் வராத அளவிற்கு, ஒரு நிரந்திர தீர்வு கிடைக்க துணையாக நிற்பேன். இது தொடர்பாக, ஊர் பஞ்சாயத்தாருடன், முதல்-அமைச்சர், உள்துறை அமைச்சரரை சந்தித்து பேசி தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News