சிறப்புக் கட்டுரைகள்

திரையிசையில் எம்.எஸ்.வி. நிகழ்த்திய புதுமை ஜாலம்

Published On 2024-09-14 10:48 GMT   |   Update On 2024-09-14 10:48 GMT
  • கவியரசு அப்படியா அந்த ட்யூனை வாசித்துக் காட்டு கேட்கலாம் என்றார்.
  • ஹம்மிங் இவருக்கு வாய்த்தது போல பாடுவதற்கு யாருக்கும் வாய்க்கவில்லை.

சிலருக்கு இசை என்பது மூச்சுக் காற்றுப் போல. அப்படிப்பட்ட இசைப்பிரியர்களைப் கேட்டால் அவர்களுடைய விருப்பப் பாடகர்களுக்கு கோவிலே கட்டிவிடுவார்கள். பி.சுசீலாவின் ரசிகர்கள் பலர் அப்படிப்பட்டவர்கள்!

தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி, சமஸ்கிருதம், சிங்களம், பெங்காலி, பஞ்சாபி, துளு, பதுகா, ஒரியா ஆகிய பலமொழிகளில் பாடி 'கின்னஸ் உலக சாதனை மற்றும் ஆசியா புக் ஆஃப் ரிகார்ட்ஸ் சாதனைகளுக்குறியவரான பி.சுசிலா தென்னிந்தியாவிற்கு கிடைத்த வரம்!!

இவரை 'ஹம்மிங் பேரரசி' எனலாம். அப்படியொரு வகைவகையான ஹம்மிங் இவருக்கு வாய்த்தது போல பாடுவதற்கு யாருக்கும் வாய்க்கவில்லை.

ஒருமுறை, "ஒரு நாள் இரவு கண் உறக்கம் பிடிக்கவில்லை" என்ற 'பணத்தோட்டம்' படப்பாடல் பதிவின்போது எம்.எஸ்.வி. ஹார்மோனியத்தில் வாசித்து சுசீலாவுக்குப் பாடல் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் சுசீலா அழுதுவிட்டு வீட்டிற்கு சென்று விட்டாராம். ஒலிப்பதிவு கூடத்தில் இருந்த ஒலிப்பதிவாளர் ரங்கசாமி, என்னப்பா, நீ எதாவது சொன்னாயா, சுசீலா வீட்டுக்குப் போயிட்டாங்க. என கேட்டார்"

இல்லையே நான் எதுவுமே சொல்லலையே என தொலைப்பேசியில் சுசீலாம்மாவை கூப்பிட்டு கேட்டபோது, "எம்.எஸ்.வி. சார், என்னைத் எதுவும் சொல்லவில்லை. அவர் சொல்லிக்கொடுத்த வகையில் பாடமுடியணுமே என்ற கவலையில் அழுதேன் " என சொன்னார்.

வீட்டுக்குப்போய் சுதாரித்துக் கொண்டு வந்து, மறுநாள் பாடிக்கொடுத்த அத்துணை சிரமமான பாடல் தான் இந்த "ஒருநாள் இரவு கண் உறக்கம் பாடல்! - இதில் ஒவ்வொரு சொல்லிலும் வளைந்து நெளிந்து போகும் கமகங்கள் (அசைவுகள்) பின்னே யாரால் தான் பாட முடியும்?


தாலாட்டுப் பாடல்கள் என்று எடுத்துக் கொண்டால் எல்லோரின் மானசீக அம்மா இவர்.

"மலர்ந்து மலராத பாதி மலர் போல"பாட்டின் நடுவிலும், முத்தான முத்தல்லவோ சோகப் பாட்டில் வரும் விசும்பலை மறக்க முடியுமா?

"சிரிப்பில் உண்டாகும் இராகத்திலே" பாடலில் தாளத்துக்குள்

அடக்கி சுரங்களில் சிரிக்கும் `சிரிப்பு'

"என்ன நினைத்து என்னை

அழைத்தாயோ? ஏனிந்தக் கோலத்தைக் கொடுத்தாயோ?"-பாடலின் "நா தழுதழுப்பு."

இப்படி எம்.எஸ்.வி. இசையில் பி.சுசீலா பாடல்களின் பல்சுவை விருந்தைப் பற்றி எழுதிக் கொண்டேயிருக்கலாம்...

எம்.எஸ்.வி. இசையமைப்பில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய அம்சங்களில் ஒன்று சீழ்க்கை ஒலி என்று சொல்லப்படும் விசில்.

உற்சாக பொழுதுகளில், கதாநாயகன் தனியாக, குறிப்பாக சைக்கிளில் செல்லும்போதும், நண்பர்களுடன் உல்லாசமாக பாடும் காட்சிகளில் காதல் படல்களில் தாலாட்டு பாடலில் கூட விசில் ஓசையை பயன்படுத்தியிருக்கிறார்.

கி.பானுமதி கிருஷ்ணகுமார்

ஒருமுறை "பார் மகளே பார்" பட பாடல் மெட்டைமைப்பின்போது முன்கூட்டியே கவியரசரிடம் நாங்க பாடல் வரிகள் இல்லாமல், வெறும் விசிலும், ஹம்மிங் மட்டும் வைத்து ஒரு பாடல் வைக்கப் போகிறோம் இந்தப் படத்தில் என்று சொல்கிறார்.

கவியரசு அப்படியா அந்த ட்யூனை வாசித்துக் காட்டு கேட்கலாம் என்றார்.

வாசித்து காட்டியதும், "விசு இது ரொம்ப அழகான ட்யூன். இதற்கு நான் வரிகள் தரேன். நல்லா வரும். இதற்கு விசில் ஹம்மிங் வேண்டாம்" என்றார்.

கவிஞரே, இயக்குநர் பீம்சிங் கிட்டே சொல்லி அவரும் ஒத்துக் கெண்டார் என சொல்கிறார் எம்.எஸ்.வி.

கண்ணதாசன் இதைப் பற்றி சிவாஜிடம் சொல்லி, இந்த ட்யூனை பாடலாகவே போடலாம் என பேச எல்லோரும் சம்மதித்து விட்டனர். ஆனால் எம்.எஸ்.வி. இந்தப் பாட்டில் கொண்டு வந்தது என்ன? விடுவாரா புதுமையை?

ஆரம்பமே முன்னிசையாக விசில் தான். அதற்கு ஒத்து ஹம்மிங். பிறகு தான் வரிகள்.

'நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே' பல்லவிக்கு முன்னும், சரணங்கள் முடிந்த பின்னும், பாடல் முடியும் போதும் விசிலும், ஹம்மிங்கிலும் முடித்திருக்கும் புதுமையை என்ன சொல்ல?

"வந்த நாள் முதல் இந்த நாள் வரை" என்றப் பாடலில் சிவாஜி சைக்கிளில் பாடிக் கொண்டே போகும்போது விசில். "கேள்வி பிறந்தது அன்று, நல்ல பதில் கிடைத்தது" என்றப் பாடலிலும், பாடலிலும் விசில்..

எம்.எஸ்.வி.யின் இசையமைப்பில் மின்னிய இன்னொரு சிறந்த மென்மையானக் குரலுக்கச் சொந்தக்காரர் பி.பி. சீனிவாஸ்.

பொதுவாக வீர எழுச்சிப் பாடல்கள் பாடும் எம்.ஜி.ஆருக்கு, பி.பி.எஸ். பாடிய மூன்று பாடல்கள் 'நீயோ நானோ யார் நிலவே' 'பால் வண்ணம் பருவம் கண்டு' 'என்னருகே நீயிருந்தால் இயற்கையெல்லாம் சுழலுவதேன்' ஆகியவை.

ஜெமினி கணேசனுக்கு ஏ.எம்.ராஜா பின்னணி பாடத் தொடங்கி, அந்த குரல் மிகவும் பொருத்தமென ஏற்றுக் கொண்டு விட்டார்கள் ரசிகர்கள்.

ஜெமினிக்கு பி.பி.எஸ். குரலை பொருத்திப் பார்க்கலாம் என எப்படிக் கணித்தாரோ எம்.எஸ்.வி. "யார் யார் யார் அவள் யாரோ" என்றப் பாடலில் ஜெமினிக்கு பி.பி.எஸ். பின்னணி பாடி பாடலோ சூப்பர் டூப்பர் ஹிட். "காலங்களில் அவள் வசந்தம்" என்ற பாடலுக்குப் பிறகு பி.பி.எஸ். பாடினாலே அது ஜெமினி பாடும் பாடலோ என்ற கேள்வி உருவானது.

இவர் பாடிய "மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா", "மவுனமே பார்வையால் ஒரு பாட்டு பாட வேண்டும்", "நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை". என்றப் தனிப் பாடல்களோ, பூஜைக்கு வந்த மலரே வா, ரோஜா மலரே ராஜகுமாரி, இந்த மன்றத்தில் ஓடி வரும் போன்ற டூயட் பாடல்களையோ ரசிக்காதவர்கள் யார்.

மணப்பந்தல் படத்தில் "உடலுக்கு உயிர் காவல்"என்றப்பாடல், ஒவ்வொரு வரியும் காவல் என்ற சொல்லே இணைப்பு தொடையாக முடியும். இந்த சோகப் பாடலை கசல் வகையில் பாட வைத்தது மட்டுமல்லாமல் இந்துஸ்தானி வகைப்பாடல் என்றாலே பி.பி, சீனிவாஸ்தான் என்கிற அளவுக்கு நிறையப் பாடல்களை அவருக்கு எம்.எஸ்.வி. தந்துள்ளார்.

நிறைய மொழிகளில் பாடியுள்ள பி.பி. சீனிவாஸ் கர்நாடக இசையில் மேதை, அழகாக கவிதைகள் எழுதக் கூடியவர். அவர் அடிக்கடி சொல்வது "மியூசிக் இல்லையென்றால் நாம் சிக் ஆகிவிடுவோம்".

Tags:    

Similar News