null
செல்வமும், செல்வாக்கும் பெற வைக்கும் உச்ச புதனின் பலன்கள்
- புத்தி, அறிவு, ஞானம் ஆகியவற்றை வழங்குவதால் புத்திக்காரகன் என்று பெயர் உண்டு.
- ஒருவரின் புத்திக் கூர்மைமையை புதனின் நிலையை வைத்து அறிய முடியும்.
நடக்கும் என்பார் நடக்காது
நடக்காதென்பார் நடந்துவிடும்
கிடைக்கும் என்பார் கிடைக்காது
கிடைக்காதென்பார் கிடைத்துவிடும் - என்ற பாடல் வரிகள் புத பகவானுக்கு மிகப் பொருந்தும். இரட்டை தன்மையான பலன்களை வழங்கி நிலை தடுமாற வைப்பதில் முன்னணி வகிப்பவர் புதன். புத்தி, அறிவு, ஞானம் ஆகியவற்றை வழங்குவதால் புத்திக்காரகன் என்று பெயர் உண்டு.
ஒருவரின் புத்திக் கூர்மைமையை புதனின் நிலையை வைத்து அறிய முடியும். ஒரு மனிதனின் ஞானத்திற்கும், புத்திக் கூர்மைக்கும் காரணமான கிரகம் என்பதால் வித்யாகாரகன் என்ற பெயரும் உண்டு. அதே போல் ஒருவருக்கு அனுபவ பாடத்தைக் கற்றுத் தருவதும் புதன் தான். பிறர் சொல்லும் புத்திமதியை கேட்காமல் தானே செயல்பட்டு புத்தி தெளிந்தேன் என்பதும் புதன் தான். புதன் வலிமை பெற்றவர்கள் மட்டுமே புத்திசாலியாக இருப்பார்கள். ஜனன ஜாதகத்தில் புதன் பலம் பெற்றவர்கள் இளமைப் பொழிவுடன் சுறுசுறுப்பாக செயல்படுவார்கள். கணக்கியல், மறைமுகமான, நுணுக்கமான பிரச்சனைகளை தீர்ப்பதில் நிபுணராக இருப்பார்கள். வியாபார தந்திரம் மிக்கவராகவும், மதிநுட்பத்தை பயன்படுத்தி இருந்த இடத்திலேயே தொழில் செய்து வருமானம் செய்பவராக இருப்பர். வேர்வை சிந்தாமல் வருமானம் ஈட்ட விரும்புவார்கள். பாவ கிரகங்களுடன் சேராமல் இருந்தால் புதன்
தனித்தன்மையுள்ள சுபகிரகம். வேறு எந்த கிரகத்துடனும் சேராத புதனுக்கும் அதன் பார்வைக்கும் குருவிற்கு நிகரான சக்தி உண்டு.
புதன் இரட்டை தன்மையுள்ள கிரகம் என்பதால் தான் சேரும் கிரகத்திற்கு, இடத்திற்க்கு தக்கவாறு பார்க்கும் கிரகத்திற்க்கு தக்கவாறு ஜாதகரை மாற்றிவிடுவார். புதன் பலம் பெற்றவர்கள் நகைச்சுவை உணர்வு மிகுந்தவுர். ஜோதிடம், பேச்சாற்றல், கணிதம், கணினித் துறை, கவிதை எழுதுதல், சிற்பம் வடித்தல், சித்திரம் வரைதல், நடிப்பு, நாடகம், சாஸ்திர ஞானம், நுண்கலைகள் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருப்பார்கள். எழுத்தாளர்கள், கவிஞர்கள், உலகம் போற்றும் நகைச் சுவை நடிகர்கள், பேச்சாளர்கள், பத்திரிக்கை துறையினர், அரசியலை அலசுபவர்கள், விமர்சிப்பவர்கள், மிகச்சிறந்த வியாபாரிகள், ஆலோசகர்கள், கல்வியாளர்கள், ஓவியர்கள் அனைவரும் புதனின் ஆதிக்கத்தில் உள்ளவர்கள்.
புதன் சுப வலுப் பெற்றவர்களுக்கு புத்தி சாலித்தனம் இருக்கும். எந்த ஒரு விஷயத்தையும் காரண காரியத்தோடு நன்கு யோசித்துச் செய்ய கூடிய திறன் பெற்றவராக இருப்பார். யாருடைய உதவியுமின்றி எந்த ஒரு நிகழ்வையும் கற்றுக் கொள்ளக் கூடிய திறமை இருக்கும். பார்ப்பதற்கு இளமையான தோற்றம் இருக்கும். யாராலும் எளிதில் ஏமாற்ற முடியாதவராக இருப்பார். லக்ன ரீதியாக நல்ல ஆதிபத்தியத்தை பெற்று புதன் இருக்கும் பொழுது நல்ல பலன்கள் ஜாதகருக்கு ஏற்படும். ஜாதகருடைய குணங்களும் மற்றவர்களால் விரும்பக் கூடியதாக, போற்றப்படக்கூடியதாக இருக்கும். லக்னத்திற்கு தீய ஆதிபத்திய நிலைபெற்று புதன் இருக்கும் பொழுது ஜாதகரின் தீய குணங்களால் பிறரின் விமர்சனங்களுக்கு உள்ளாகக்கூடிய நிலைமையையும் தரும்.
புதன் பலம் குறைந்திருப்பவர்கள், நுண்ணறிவுத் திறன் குறையப் பெற்றிருப்பவர்கள், மனக்குழப்பம், அடைவார்கள், நுரையீரல், சிறுநீரகம், நரம்புத்தளர்ச்சி, ஜீரண உறுப்புகளின் கோளாறு, உடல் நலம் பாதிக்கும்.
தனித்திருக்கும் நிலையில் சுபராக இருப்பார். பிறருடன் இணையும் போது, அவர் சேரும் கிரகம் சுபரானால், தன்னைச் சுபராகவும் அந்தக் கிரகம் பாபரானால் தன்னையும் பாபராகவும் தனது நிலையை மாற்றிக் கொள்வார்.
உச்ச புதன் பெயர்ச்சி 2024
மனிதர்களின் வாழ்க்கையைப் பொறுத்தவரை சர்வம் புதன்மயம் என்று கூறலாம். அந்தளவிற்கு புதன் ஒருவரின் வாழ்க்கையில் மிக முக்கிய பங்கு வகிக்கிறார். இவர் நரம்பிற்கு அதிபதி என்பதால் புதன் பலம் பெற்றால் உடலில் நரம்புகள் சிறப்பாக இயங்கி அறிவு, ஆற்றல், கல்வி ஆகியவற்றில் சிறந்து விளங்குகிறார்கள். புதன் பலவீனமாக இருக்கும் பட்சத்தில் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் சில கோளாறுகள் ஏற்படும். இத்தகைய புதன் தனது சொந்த வீடான கன்னியில் 23. 9.2024 முதல் 10.10.2024 வரை உச்சம் பெற்று கேதுவுடன் இணைகிறார். இதனால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசிக்கு புதன் 3, 6-ம் அதிபதியான புதன், ராசிக்கு 6-ல் உச்சம் பெறுவதால் உத்தியோக மாற்றம் ஏற்படலாம். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். விண்ணப்பித்த வீடு, வாகன, தொழில் முன்னேற்ற கடன் கிடைக்கும். முக்கிய ஆவணங்கள் தொடர்பான பிரச்சனைகள் அகலும். ஆரோக்கியத்தை உடல் நலத்தை பேணுவது நல்லது.
பரிகாரம்: புதன்கிழமை சக்ரத்தாழ்வாரை வழிபடவும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்கு 2, 5-ம் அதிபதியான புதன் ராசிக்கு 5-ல் உச்சம் பெறுவதால் புத்திர பிராப்த்தம் உண்டாகும். பிள்ளைகளால் பூர்வீகத்தால், பூர்வீகச் சொத்தால் பயன் உண்டு. மூளையை மூலதனமாகக் கொண்ட ஏஜென்சி, கன்சல்டிங் நிறுவனங்கள், பங்கு வர்த்தகத்தில் மிகுதியாக சம்பாதிப்பார்கள். கவுரவப் பதவி கிடைக்கும். கற்ற கல்வி பயன் தரும்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமை மகாலட்சுமியை வழிபடவும்.
மிதுனம்
மிதுன ராசிக்கு 1, 4-ம் அதிபதியான புதன் உச்சம் பெறுவதால் வாகனம், பூமி லாபம், அரசுவகையில் ஆதாயம், உயர்ந்த பதவி அமையும். செல்வச் செழிப்பு உண்டு. சுய உழைப்பில் சொத்துச் சேர்க்கை உண்டு. ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் தொழிலில் சாதனை படைப்பார்கள். ஆரோக்கியம் மேம்படும். கல்வி ஆர்வம் கூடும்.
பரிகாரம்: புதன் கிழமை மகா விஷ்ணுவை வழிபடவும்.
கடகம்
கடக ராசிக்கு 3,12-ம் அதிபதியான புதன் உப ஜெய ஸ்தானமான 3-ம்மிடத்தில் உச்சம் பெறுவதால் ஞாபக சக்தி அதிகமாக இருக்கும். காணாமல் போன ஆவணங்கள், நகைகள், கை மறதியாக வைத்த பொருட்கள் திரும்ப கிடைக்கும். சகோதர ஒற்றுமை மேம்படும். வெளிநாட்டு வேலை, பயணம் உறுதியாகும்.
பரிகாரம்: திங்கட்கிழமை அம்மன் வழிபாடு செய்யவும்.
சிம்மம்
சிம்ம ராசிக்கு தன, லாப அதிபதியாகிய புதன் தன ஸ்தானத்தில் உச்சம் பெறுவதால் சாதகமான பலன் உண்டு. தொட்டது துலங்கும். வழக்கறிஞர், அரசியல்வாதிகள், ஜோதிடர்கள், ஆசிரியர்கள், மார்க்கெட்டிங் துறை போன்றவற்றில் இருப்பவர்களுக்கு சுப பலன்கள் இரட்டிப்பாகும். சாதாரண நிலையில் இருப்பவர்கள் கூட உயர் நிர்வாக பதவி, உயர்ந்த அந்தஸ்தை அடைவார்கள்.
பரிகாரம்: சூரிய நாராயணரை வழிபடவும்.
கன்னி
கன்னி ராசிக்கு 1, 10-ம் அதிபதியாகிய புதன் லக்னத்தில் உச்சம் பெறுகிறார். செல்வாக்கு, புகழ், அந்தஸ்து கவுரவம் உயரும். தொழில் தந்திரம் கூடும். பல தொழில் துறை பற்றிய அறிவு கூடும். தொழில் ஞானத்தை பயன்படுத்தி பிறருக்கு ஆலோசனை கூறி சம்பாதிப்பார்கள். கர்மம் செய்ய புத்திரன் பிறப்பான். அதிகார பலமிக்க அரசாங்க பதவி, அரசியல் செல்வாக்கு ஆதாயம் உண்டு.
பரிகாரம்: கன்னி பெண்களுக்கு இயன்ற தானம் வழங்கவும்.
துலாம்
துலாம் ராசிக்கு புதன் 9, 12-ம் அதிபதியாகிய புதன் ராசிக்கு 12ல் உச்சம் பெறுகிறார். தொழில் உத்தியோகம், உயர் கல்வி நிமித்தமாக வெளியூர், வெளிநாடு செல்லலாம். முன்னோர்களின் நல்லாசி கிடைக்கும். பிறவிக் கடன், பொருள் கடன் தீர்க்க உகந்த காலம். தந்தை வழி பூர்வீகச் சொத்துகள் கிடைக்கும். கண் அறுவை சிகிச்சை வெற்றி தரும்.
பரிகாரம்: மகாவிஷ்ணு சமேத மகாலட்சுமியை வழிபடவும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்கு அஷ்டமாதிபதி மற்றும் லாப அதிபதியான புதன் லாப ஸ்தானத்தில் உச்சம் பெறுவதால் வழக்குகளில் வெற்றி உண்டாகும். அவமானம், விபத்து, கண்டம், சர்ஜரியால் ஏற்பட்ட பாதிப்புகள் சீராகும். மூத்த சகோதரம், சித்தப்பாவால் ஆதாயம் உண்டு.
மறுவிவாக முயற்சி நிறைவேறும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.
பரிகாரம்: லட்சுமி நரசிம்மரை வழிபடவும்.
தனுசு
தனுசு ராசிக்கு 7, 10-ம் அதிபதியாகிய புதன் 10-ம்மிடமான தொழில் ஸ்தானத்தில் உச்சம் பெறுகிறார். கூட்டுத் தொழில் முயற்சி வெற்றி தரும். திருமணத் தடை அகலும். கல்வி, புகழ், அரசியல், லாபங்களும், பூர்வீக வகையில் நன்மையும் கிட்டும். வாழ்க்கைத் துணையாலும் ஆதாயம் உண்டு.
பரிகாரம்: கோதண்ட ராமரை வழிபடவும்.
மகரம்
மகர ராசிக்கு 6, 9-ம் அதிபதியான புதன் பாக்கிய ஸ்தானத்தில் உச்சம் பெறுகிறார். தொழிலில் மேன்மையும், அரசியல் பதவியும். செல்வாக்கும், சட்டத்துறையில் மதிப்பும் கிடைக்கும்.
பித்ருக்களுக்கான நீத்தர் கடன் செய்ய உகந்த நேரம். சிலர் தந்தையின் கடனை சுமக்க நேரும். அல்லது தந்தைக்கு வைத்திய செலவு அதிகமாகும். விரும்பிய கடன் கிடைக்கும்.
பரிகாரம்: தாய் மாமாவின் நல்லாசி பெறுவது நல்லது.
கும்பம்
கும்ப ராசிக்கு 5, 8-ம் அதிபதியான புதன் ராசிக்கு 8ல் உச்சம் பெறுகிறார். சிலருக்கு வம்பு வழக்கான காதல் திருமணம் நடக்கும். சிலருக்கு காதலால் அவமானம், வம்பு, வழக்கு உருவாகும். ஆரோக்கிய குறைபாடு அறுவை சிகிச்சையில் சீராகும்.
குழந்தைகளால் மனச் சங்கடம் ஏற்படும். சிலருக்கு பதவியில் நெருக்கடி இருக்கும். அல்லது வேலையில் மெமோ வாங்குவார்கள். சுபமும், அசுபமும் கலந்தே நடக்கும்.
பரிகாரம்: மன வளர்ச்சி குன்றியவர்களுக்கு உதவ வேண்டும்.
மீனம்
மீன ராசிக்கு 4,7-ம் அதிபதியான புதன் 7-ம்மிடத்தில் உச்சம் பெறுகிறார். திருமணத் தடை அகலும். நல்ல சொத்து சுகத்துடன் கூடிய வாழ்க்கைத் துணை அமையும். வாழ்க்கைத் துணைக்கு தாய் வழி சொத்து கிடைக்கும். கூட்டுத் தொழில் ஆர்வம் கூடும். தடைபட்ட கல்வியைத் தொடரும் வாய்ப்புகள் உள்ளது. தாயின் நல்லாசிகள் கிடைக்கும்.
கோட்சார புதன் உச்சமடையும். இந்த காலத்தில் உரிய வழிபாட்டு முறைகளை பயன்படுத்தி பயன் பெற வாழ்த்துக்கள்.
போன்: 98652 20406