கிரிக்கெட்

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: சென்னை வந்தடைந்த இந்திய அணி வீரர்கள்

Published On 2024-09-12 17:46 GMT   |   Update On 2024-09-12 17:46 GMT
  • இந்தியா, வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் சென்னையில் வரும் 19-ம் தேதி தொடங்குகிறது.
  • நாளை முதல் இந்திய வீரர்கள் பயிற்சியில் ஈடுபடுவார்கள்.

சென்னை:

வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இந்தியா, வங்கதேசம் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் வரும் 19-ம் தேதி தொடங்குகிறது.

இதையடுத்து ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் விராட் கோலி, ரிஷப் பண்ட், ஜெய்ஸ்வால், லோகேஷ் ராகுல், சுப்மன் கில், பும்ரா, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், அக்ஷர் பட்டேல் உள்பட 17 பேர் இடம் பெற்றுள்ளனர்.

இந்நிலையில், பும்ரா, கே.எல்.ராகுல் உள்ளிட்ட இந்திய அணி வீரர்கள் இன்று இரவு சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். அவர்கள் நாளை முதல் பயிற்சியில் ஈடுபடுகிறார்கள்.

வங்கதேச அணியினர் வரும் 15-ம் தேதி டாக்காவில் இருந்து சென்னை வருகிறார்கள்.

Tags:    

Similar News