ஐ.பி.எல். மெகா ஏலத்தில் ரிஷப் பண்ட்?
- ஒவ்வொரு அணியும் 6 வீரர்களை தக்கவைத்துக் கொள்ள முடியும்.
- தக்கவைக்கும் வீரர்கள் விவரங்களை 31-ந்தேதிக்குள் வழங்க வேண்டும்.
ஐ.பி.எல். தொடருக்கான வீரர்கள் மெகா ஏலம் அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. இதனால் ஒவ்வொரு அணிகளும் ஆறு வீரர்களை தக்கவைத்துக் கொண்டு மற்ற வீரர்களை ரிலீஸ் செய்ய வேண்டும். வருகிற 31-ந்தேதிக்குள் தக்கவைத்த வீரர்கள் பட்டியலை 10 அணிகளும் தாக்கல் செய்ய வேண்டும்.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. அந்த அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ரிக்கி பாண்டிங் நீக்கப்பட்டுள்ளார். கங்குலி விலகியுள்ளார். ஹேமங் பதானி தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் ரிஷப் பண்ட்-ஐ ரிலீஸ் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒருவேளை அவரை வெளியிட்டால் ஆர்.சி.பி. ரிஷப் பண்ட்-ஐ ஏலத்தில் எடுக்க ஆர்வம் காட்ட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரிஷப் பண்ட் தொடக்கத்தில் இருந்தே டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இவரை ரிலீஸ் செய்தால் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகளும் ஏலத்தில் எடுக்க ஆர்வம் காட்டும் எனத் தெரிகிறது.
லக்னோ அணியின் கேப்டனாக இருந்த கே.எல். ராகுலை அந்த அணியை விடுவிக்க இருக்கிறது. இதனால் ரிஷப் பண்ட்-ஐ கேப்டனாக்க ஆர்வம் காட்டும்.
முன்னதாக, டெல்லி அணியின் துணை-உரிமையாளரான பார்த் ஜிண்டால் சில வீரர்களை நாங்கள் தக்கவைத்துக் கொள்ள அணி ஆர்வம் காட்டும் எனத் தெரிவித்திருந்தார். "எங்கள் அணியில் சில மிகச் சிறந்த வீரர்கள் உள்ளனர். விதிமுறை வெளியிடப்பட்டுள்ளது. எங்களுடைய கிரிக்கெட் இயக்குனர் மற்றும் ஜி.எம்.ஆர். உடன் ஆலோசித்த பிறகு முடிவு எடுக்கப்படும்.
ரிஷப் பண்ட் நிச்சயமாக தக்கவைத்துக் கொள்ளப்படுவார். அக்சார் பட்டேல் திறமையானவர். டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ஜேக் பிராசர்-மெக்கர்க், குல்தீப் யாதவ், அபிஷேக் பொரேல், முகேஷ் குமார், கலீல் அகமது போன்ற சிறந்த வீரர்கள் அணியில் உள்ளனர்" எனக் கூறியிருந்தார்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா, அந்த அணியில் இருந்து வெளியேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை அப்படி வெளியேறினால் பெரிய தொகைக்கு அவரை ஏலம் எடுக்க வேண்டியிருக்கும். அதனால் ரிஷப் பண்ட்-ஐ ரிலீஸ் செய்ய டெல்லி நினைத்திருக்கலாம்.