கிரிக்கெட் (Cricket)

இளம் கிரிக்கெட் வீரர் கார் விபத்தில் காயம்: இரானி கோப்பை, ரஞ்சி டிராபியை தவற விடுகிறார்

Published On 2024-09-28 06:08 GMT   |   Update On 2024-09-28 06:08 GMT
  • இரானி கோப்பைக்கான மும்பை அணியில் இடம் பிடித்திருந்தார்.
  • கான்பூரில் இருந்து லக்னோவிற்கு காரில் செல்லும்போது விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்காக விளையாடி வருபவர் சர்பராஸ் கான். இவர் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடினார். தற்போது கே.எல். ராகுல் அணிக்கு திரும்பியதால் அவருக்கு ஆடும் லெவன் அணியில் இடம் கிடைக்கவில்லை.

இவரது சகோதரர் முஷீர் கான். 19 வயதேயான இவர் முதல்தர போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார். சமீபத்தில் முடிவடைந்த துலீப் டிராபியில இந்தியா "சி" அணிக்காக விளையாடி 181 ரன்கள் விளாசினார். சுப்மன் கில், மயங்க் அகர்வால், ஆவேஷ் கான், குல்தீப் யாதவ், ஆகாஷ் தீப், கலீல் அகமது ஆகியோர் இடம் பிடித்திருந்த இந்தியா "ஏ" அணிக்கெதிராக சதம் விளாசினார்.

இரானி கோப்பையில் மும்பை- ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிகள் மோத இருக்கின்றன. மும்பை அணிக்காக முஷீர் கான் விளையாட இருக்கிறார்.

இவர் இரானி கோப்பையில் விளையாடுவதற்கான உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் இருந்து லக்னோ செல்லும்போது கார் விபத்தில் சிக்கியுள்ளார்.

இந்த விபத்தில் அவரது கழுத்துப் பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் இரானி கோப்பையில் மும்பை அணிக்கெதிராக அவர் விளையாட முடியாது. மேலும், அக்டோபர் 11-ந்தேதி தொடங்கும் ரஞ்சி கோப்பையின் தொடக்க போட்டிகளில் விளையாட முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

அவருக்கு ஏற்பட்ட காயம் குணமடைய சுமார் 3 மாதங்கள் ஆகும் எனத் தெரிகிறது. இரானி கோப்பை போட்டி அக்டோபர் 1-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது.

இரானி கோப்பைக்கான மும்பை அணியுடன் முஷீர் கான் லக்னோ செல்லவில்லை. அவரது தந்தையுடன் அசாம்காரில் இருந்து லக்னோவிற்கு தனியாக பயணம் செய்யும்போது விபத்து ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News