கிரிக்கெட்

இந்தியாவுக்கு எதிராக இதுதான் இலக்கு- வங்கதேசம் கேப்டன் ஷன்டோ

Published On 2024-09-16 02:12 GMT   |   Update On 2024-09-16 02:12 GMT
  • நிச்சயம் இது மிகவும் சவாலான தொடராக எங்களுக்கு இருக்கப்போகிறது.
  • வெற்றி பெறும் வேட்கையோடு விளையாடுவோம்.

சென்னை:

வங்கதேசம் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா- வங்கதேசம்ம் இடையிலான முதலாவது டெஸ்ட் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் வருகிற 19-ந்தேதி தொடங்குகிறது. இதையொட்டி ரோகித் சர்மா தலைமையிலான இந்திய வீரர்கள் சென்னையில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக நஜ்முல் ஹூசைன் ஷன்டோ தலைமையிலான வங்கதேசம் அணியினர் நேற்று சென்னை வந்து சேர்ந்தனர். முன்னதாக புறப்படும் போது டாக்கா விமான நிலையத்தில் கேப்டன் நஜ்முல் ஹூசைன் ஷன்டோ நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நிச்சயம் இது மிகவும் சவாலான தொடராக எங்களுக்கு இருக்கப்போகிறது. பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியதால் கூடுதல் நம்பிக்கையை பெற்றுள்ளோம். ஒட்டுமொத்த தேசமும் இப்போது எங்கள் மீது நம்பிக்கை வைத்திருப்பதாக நினைக்கிறேன். ஒவ்வொரு தொடரும் நாம் சாதிப்பதற்கு ஒரு வாய்ப்பு. இவ்விரு டெஸ்டிலும் வெற்றி பெற விரும்புகிறோம். எங்களது திட்டமிடல், அணுகுமுறையை களத்தில் சரியாக செயல்படுத்த வேண்டும். எங்களது பணியை கச்சிதமாக செய்தால், சாதகமான முடிவை பெற முடியும்.

அவர்கள் (இந்தியா) தரவரிசையில் எங்களை விட முன்னணியில் இருக்கிறார்கள். ஆனால் சமீபத்தில் நாங்கள் நன்றாக விளையாடியுள்ளோம். டெஸ்டில் 5 நாட்களும் சிறப்பாக விளையாட வேண்டும் என்பதே எங்களது இலக்கு. டெஸ்டில் கடைசி பகுதியில் (5-வது நாள் தேனீர் இடைவேளைக்கு பிறகு) முடிவு கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறோம். கடைசி பகுதிக்கு போட்டி நகர்ந்தால் அதன் பிறகு எதுவும் நடக்கலாம். அப்போது எங்களுக்கும் வெற்றி வாய்ப்பு கிடைக்கும்.

வெற்றி பெறும் வேட்கையோடு விளையாடுவோம். ஆனால் ரொம்ப அதிகமாக சிந்திக்க விரும்பவில்லை. 5 நாட்களும் ஆட வேண்டும், எங்களது பலத்துக்கு ஏற்ப விளையாட வேண்டும். அது தான் முக்கியம்.

அணியில் வேகப்பந்து வீச்சாளர்களும், சுழற்பந்து வீச்சாளர்களும் சரியான கலவையில் இருக்கிறார்கள். எங்களது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அனுபவம் குறைவு தான். ஆனால் சுழற்பந்து வீச்சாளர்கள் அனுபவசாலிகள். அவர்களால் எந்த சீதோஷ்ண நிலையிலும் சிறப்பாக பந்து வீச முடியும். ஆனால் ஒரு அணியாக முழு திறமையை வெளிப்படுத்தினால் மட்டுமே போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். சுழற்பந்து வீச்சாளர்கள் மட்டுமல்ல, வேகப்பந்து வீச்சாளர்கள், பேட்ஸ்மேன்களும் பங்களிப்பு அளிக்க வேண்டியது அவசியம். ஒட்டுமொத்த அணியும் ஒருங்கிணைந்து விளையாட வேண்டும்.

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைத்ததற்காக வங்கதேசம் அரசு எங்களுக்கு ரூ.3.2 கோடி (இந்திய மதிப்பில் ரூ.2¼ கோடி) ஊக்கத்தொகையாக வழங்கியுள்ளது. அந்த தொகையில் ஒரு பகுதியை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரண நிதிக்கு வழங்க உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்தியாவுக்கு எதிராக இதுவரை 13 டெஸ்டில் விளையாடி உள்ள வங்கதேசம்ம் அதில் 11-ல் தோல்வியும், 2-ல் டிராவும் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News