பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களுடன் சந்திப்பு: பிரதமருக்கு தொப்பியை பரிசளித்த வீரர்
- பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய அணியினருடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
- பிரதமரிடம் கையெழுத்து பெற்ற வீரர்கள் அவருக்கு பரிசுகளும் வழங்கினர்.
புதுடெல்லி:
17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பாரீசில் சில தினங்களுக்கு முன் நிறைவடைந்தது. இதில் 170 நாடுகளைச் சேர்ந்த 4,400-க்கும் அதிகமான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இதில் இந்தியா 7 தங்கம், 9 வெள்ளி, 13 வெண்கலம் என மொத்தம் 29 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் 18-வது இடம் பிடித்தது.
இதையடுத்து, பதக்கம் வென்ற இந்திய அணியினருக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பாரா ஒலிம்பிக் வரலாற்றிலேயே இந்தியா அதிக அளவு பதக்கங்களை வென்று சாதனை படைத்தது. கடந்த டோக்கியோ பாரா ஒலிம்பிக் தொடரில் இந்தியா 19 பதக்கங்கள் வென்றதே இந்தியாவின் அதிகபட்ச பதக்கமாக இருந்தது. அந்த எண்ணிக்கையை இந்த முறை முந்திய இந்திய வீரர்கள் மொத்தம் 29 பதக்கங்களை வென்று அசத்தினர்.
இதற்கிடையே, பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு மத்திய அரசு பரிசுத்தொகை அறிவித்து கவுரவித்தது.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்துக்கு பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய அணியினர் சென்றனர். அவர்கள் பிரதமர் மோடியைச் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். பிரதமரிடம் கையெழுத்து பெற்ற வீரர்கள் அவருக்கு பரிசுகளும் வழங்கினர்.