செய்திகள் (Tamil News)

திருவண்ணாமலையில் டைல்ஸ் நிறுவனத்தை உடைத்து ரூ.18½ லட்சம் பணம் கொள்ளை: போலீஸ் விசாரணை

Published On 2016-10-08 06:50 GMT   |   Update On 2016-10-08 06:50 GMT
திருவண்ணாமலையில் டைல்ஸ் நிறுவனத்தில் ரூ. 18½ லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக நிறுவன ஊழியர்களிடம் விசாரணை நடக்கிறது.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை-திண்டிவனம் சாலையில் ரெயில்வே கேட் அருகே திருஞானசம்பந்தம் என்பவருக்கு சொந்தமான டைல்ஸ் நிறுவனம் உள்ளது.

இந்த நிறுவனத்தின் மேலாளராக பிரபு என்பவர் பணிபுரிகிறார். இவர் நேற்று வசூலுக்கு சென்று இருந்தார். இதில் ரூ. 18½ லட்சம் வசூலானது.

அந்த பணத்தை நிறுவனத்தின் அலுவலக அறையில் உள்ள மேஜை டிராயரில் வைத்திருந்தார். பின்னர் நேற்று இரவு நிறுவனத்தை மூடிவிட்டு சென்றனர்.

இன்று காலை வந்து பார்த்தபோது அலுவலக அறையின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது மேஜை டிராயரில் வைக்கப்பட்டு இருந்து ரூ.18½ லட்சம் பணத்தை காணவில்லை.

யாரோ மர்ம நபர்கள் நிறுவனத்தின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

தகவல் கிடைத்ததும் போலீஸ் துணை சூப்பிரண்டு சரவணக்குமார் மற்றும் திருவண்ணாமலை கிழக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். கைரேகை நிபுணர்களும் வந்து கைரேகைகள் பதிவு செய்தனர்.

டைல்ஸ் நிறுவனத்தில் நடந்த பணம் கொள்ளையில் நிறுவனத்தின் ஊழியர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். எனவே அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

Similar News