ஆத்தூர் பகுதியில் கடும் வறட்சி: விளை நிலங்களை விற்கும் விவசாயிகள்
ஆத்தூர்:
திண்டுக்கல் மாவட்டத்தில் ஆண்டுக்கு 836மி.மீட்டர் மழை பெய்ய வேண்டும். ஆனால் இது வரை 440 மி.மீட்டர் மழை தான் பெய்துள்ளது. இதனால் ஆத்தூர் பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. விவசாய பணிக்கு என்று புல்வெட்டி கண்மாய் தண்ணீர் இல்லாததால் விவசாயிகள் பெறும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.
ஆத்தூர் பகுதியில் வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயிகள் பயிர்களை காப்பாற்ற வழி தெரியாமல் கவலையில் உள்ளனர். இதனால் பிழைப்பதற்கு வழியில்லாமல் விவசாயிகள் சாகுபடி செலவுக்கு வாங்கிய வங்கி கடன் மற்றும் தனியார் கடன்களை அடைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் கடன்களில் இருந்து மீளவும் குடும்ப செலவுகளை சமாளிக்கவும் தங்கள் விளை நிலங்களை விற்பனை செய்யும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் விளை நிலங்களை விற்க கட்டுப்பாடு உள்ளதால் விற்பதற்கும் வழியில்லாமல் அவல நிலையில் உள்ளனர். இதை தடுக்கவும் விவசாயிகளை காக்கவும் மாற்று வழியினை அரசு கொண்டு வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.