செய்திகள் (Tamil News)

முழு அடைப்பு போராட்டத்துக்கு விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு ஆதரவு: பி.ஆர்.பாண்டியன்

Published On 2017-04-17 03:02 GMT   |   Update On 2017-04-17 03:02 GMT
25-ந் தேதி நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்துக்கு விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு ஆதரவு அளிப்பதாக பி.ஆர்.பாண்டியன் அறிவித்துள்ளார்.
மன்னார்குடி:

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் வருகிற 25-ந் தேதி நடைபெற உள்ள முழு அடைப்பு போராட்டத்துக்கு அனைத்து அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் ஆதரவு அளித்து, போராட்டத்தை வெற்றி பெற செய்ய வேண்டும். விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு 25-ந் தேதி நடைபெறும் போராட்டத்துக்கு முழு ஆதரவு அளிக்கும். அன்றைய தினம் விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் ரெயில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி ரெயில் மறியல் போராட்டம் நடைபெறும்.



தமிழக அரசு முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு வழங்க வேண்டும். இந்த போராட்டத்துக்கு பிறகாவது, மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம், நீர் பங்கீட்டு குழுவை அமைக்கவும், ஜூன் மாதம் 12-ந் தேதி காவிரி நீரை கர்நாடகத்திடம் இருந்து தமிழகத்துக்கு பெற்று தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஹைட்ரோ கார்பன் திட்ட எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக கோவையில் இருந்து நெடுவாசலுக்கு ரெயிலில் புறப்பட்டு வந்த மாணவ-மாணவிகளை தீவிரவாதிகளை பிடிப்பது போல போலீசார் கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற நடவடிக்கைகளால் போராட்டம் தீவிரமடையும் என்பதை தமிழக அரசு உணர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News