செய்திகள்

மரக்காணம் அருகே தலைமை ஆசிரியர் வீட்டில் ரூ.8 லட்சம் நகை-பணம் கொள்ளை

Published On 2018-05-15 07:44 GMT   |   Update On 2018-05-15 07:44 GMT
மரக்காணம் அருகே தலைமை ஆசிரியர் வீட்டில் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மரக்காணம்:

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ளது உலகாபுரம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் பாபு(வயது 63). ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர். இவரது மனைவி வசந்தி. இவர்களுக்கு வெங்கடேசன் என்ற மகன் உள்ளான். இவரது மனைவி சுபாஷினி. நேற்று இரவு சாப்பிட்ட பின் அனைவரும் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தனர். காற்றிற்காக கதவை திறந்து வைத்திருந்தனர்.

நள்ளிரவு 2 மணியளவில் 3 மர்மமனிதர்கள் நைசாக வீட்டிற்குள் புகுந்தனர். மேலும் டிரவுசர் அணிந்திருந்தனர். அவர்கள் உடல் முழுவதும் எண்ணை தடவி இருந்தனர். வீட்டிற்குள் புகுந்த அவர்கள் பீரோவில் இருந்த ரூ.2 லட்சத்து 6 ஆயிரம் ரொக்க பணத்தையும், 37 பவுன் நகைகளையும் கொள்ளையடித்தனர். அப்போது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பாபு திடுக்கிட்டு எழுந்து உள்ளே சென்றார். அங்கு 3 கொள்ளையர்கள் டிரவுசருடன் நிற்பதை கண்டு கூச்சல்போட்டார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் அனைவரும் எழுந்தனர். அப்போது வீட்டில் இருந்து 3 கொள்ளையர்கள் வெளியே ஓடினர். அவர்களை பிடிக்க முயன்றனர். அதற்குள் அவர்கள் அங்கிருந்து மின்னல்வேகத்தில் தப்பி ஓடிவிட்டனர்.

வீட்டிற்குள் சென்று பார்த்தபோது வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்து ரூ.8 லட்சம் மதிப்புள்ள நகை-பணம் கொள்ளை போயிருந்தது.

இதுகுறித்து பிரம்மதேசம் போலீசில் பாபு புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் பாபு மற்றும் போலீசார் விரைந்து சென்று கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் இந்த கொள்ளையில் துப்பு துலக்க விழுப்புரத்தில் இருந்து போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை நடந்த வீட்டை மோப்பம் பிடித்து வெளியே சென்று நின்றது. இந்த கொள்ளை தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்த கொள்ளையர்களை தேடிவருகின்றனர்.
Tags:    

Similar News