செய்திகள்

புதுக்கோட்டை அருகே இன்று காலை அரசு பஸ் மோதி தம்பதி பலி

Published On 2018-06-03 15:34 GMT   |   Update On 2018-06-03 15:34 GMT
புதுக்கோட்டை அருகே அரசு பஸ்- பைக் மோதியதில் தம்பதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கந்தர்வக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள கல்லாக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 55), விவசாயி. இவரது மனைவி பத்மா (45). இவர்கள் இருவரும் கறம்பக்குடியில் இன்று காலை நடைபெற்ற உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மொபட்டில் சென்றனர். சுப்பிரமணியன் மொபட்டை ஓட்ட, பத்மா பின்னால் அமர்ந்திருந்தார்.

இந்த நிலையில் கறம்பக்குடி அருகே சடையன்தெரு பகுதியில் செல்லும் போது அந்த வழியாக கறம்பக்குடியில் இருந்து கந்தர்வக்கோட்டை நோக்கி சென்ற அரசு பஸ்சும், மொபட்டும் நேருக்கு நேர் மோதின. இதில் சுப்பிரமணியன் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். பத்மா காயமடைந்து உயிருக்கு போராடினார். உடனே அவரை பொதுமக்கள் மீட்டு கறம்பக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பத்மா சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இந்த விபத்து குறித்து கந்தர்வக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகை சாமி, சப்-இன்ஸ்பெக்டர் ராமன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் டிரைவர் துரைராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் பலியான சுப்பிரமணியன்-பத்மா தம்பதியினருக்கு 3 மகள்கள் உள்ளனர். அவர்கள் தாய்-தந்தையின் உடல்களை பார்த்து கதறி அழுதது பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.  

Tags:    

Similar News