செய்திகள் (Tamil News)

பள்ளிக்கு சரியாக வந்து பாடம் நடத்தாத பள்ளி தலைமை ஆசிரியர் சஸ்பெண்டு

Published On 2018-06-09 08:20 GMT   |   Update On 2018-06-09 08:20 GMT
போளூர் அருகே பள்ளிக்கு சரியாக வந்து பாடம் நடத்தாத பள்ளி தலைமை ஆசிரியர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

போளூர்:

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை ஒன்றியம் முடக்காட்டூர் மலை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது.

இந்த பள்ளி தலைமை ஆசிரியராக ரவி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் பள்ளிக்கு சரியாக வராமலும், மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தாமலும் பணியில் அலட்சியமாக இருந்ததாக பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்தன.

கடந்த கல்வியாண்டில் தலைமை ஆசிரியருக்கு எதிராக மலை கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர் இருக்கும் வரை பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என கூறி மாணவர்களை அழைத்து சென்று விட்டனர்.

இதுகுறித்து ஜமுனாமரத்தூர் வட்டார கல்வி அலுவலர் கோவிந்தராஜிடம் புகார் அளித்தனர்.

இதனை தொடர்ந்து வட்டார கல்வி அலுவலர் விசாரணை நடத்தினார். கடந்த ஜனவரி மாதம் தலைமை ஆசிரியர் ரவிக்கு கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளி திறக்கப்பட்டதும். ரவி மீண்டும் பணிக்கு திரும்பினார். இதனால் கோபமடைந்த கிராம மக்கள் தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து போராட்டம் செய்தனர். இதனால் ஒருவாரமாக பள்ளி செயல்படவில்லை.

ஆசிரியர்கள் மட்டும் பள்ளிக்கு வந்து சென்று கொண்டிருந்தனர். இதுகுறித்து போளூர் மாவட்ட கல்வி அலுவலர் ராஜேந்திரன் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

அப்போது தலைமை ஆசிரியரை இடமாற்றம் செய்யக் கோரி பொதுமக்கள் மனு அளித்தனர். இதனையடுத்து தலைமை ஆசிரியர் ரவியை சஸ்பெண்டு செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து கிராம மக்கள் தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பினர். #tamilnews

Tags:    

Similar News