செய்திகள் (Tamil News)

மதுரையில் ரே‌ஷன் கடை ஊழியர் வெட்டிக்கொலை

Published On 2018-06-12 07:40 GMT   |   Update On 2018-06-12 07:40 GMT
மதுரையில் இன்று காலை ரே‌ஷன் கடை ஊழியர் சரமாரி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை:

மதுரை கீரைத்துறை வாழைத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் முனுசாமி (வயது28) ரே‌ஷன் கடை ஊழியர்.

இன்று காலை 9 மணி அளவில் வாழைத்தோப்பு பகுதியில் உள்ள ரே‌ஷன் கடையை திறந்து பொருட்கள் விநியோகம் செய்ய தொடங்கினார். அப்போது 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் முனுசாமியை சுற்றி வளைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டினர்.

இதில் அவர் ரத்த வெள்ளத்தில் ரே‌ஷன் கடைக்குள்ளேயே துடிதுடித்து பலியானார். பின்னர் அந்த கும்பல் மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடிவிட்டது.

இதுகுறித்து கீரைத்துறை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். முனுசாமியின் உடலை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

முனுசாமி கொலைக்கான காரணம் மற்றும் கொலையாளிகள் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews

Tags:    

Similar News