செய்திகள்
தற்கொலை செய்து கொண்ட மாணவி பவித்ரா.

கடலூரில் பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2018-06-16 05:14 GMT   |   Update On 2018-06-16 05:14 GMT
கடலூரில் இன்று காலை பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த கூடலூர் பகுதியை சேர்ந்தவர் சேகர். இவரது மகள் பவித்ரா (வயது 15). இவரது தாய்-தந்தை இருவரும் ஏற்கனவே இறந்து விட்டனர்.

இதனால் பவித்ரா தனது உறவினர்களால் கடலூர் செம்மண்டலத்தில் உள்ள அரசு சேவை இல்லத்தில் சேர்க்கப்பட்டார். கடந்த 2 ஆண்டுகளாக சேவை இல்லத்தில் தங்கி அங்குள்ள பள்ளியில் படித்து வந்தார்.

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி விட்டு விடுமுறைக்காக திருக்கோவிலூரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்று இருந்தார். பின்னர் சேவை இல்லத்துக்கு வந்த அவர் பிளஸ்-1 வகுப்பில் சேர்ந்து படித்து வந்தார்.

பள்ளி முடிந்து சேவை இல்லத்துக்கு வந்த பவித்ரா முன்புபோல் யாரிடமும் சரியாக பேசாமல் அமைதியாகவே இருந்தார்.

இந்த நிலையில் இன்று காலை பவித்ரா தங்கி இருந்த அறைக்கு சென்ற அவரது தோழிகள் அவர் அங்கு இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவரை பல இடங்களில் தேடினர். அப்போது சேவை இல்லத்தில் உள்ள பாழடைந்த கட்டிடத்தில் பவித்ரா சுடிதாரின் துப்பட்டாவில் தூக்குப் போட்ட நிலையில் பிணமாக தொங்கினார்.

இது குறித்து மற்ற மாணவிகள் சேவை இல்ல அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் புதுநகர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பவித்ராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பவித்ரா எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்று தெரியவில்லை. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Tamilnews
Tags:    

Similar News