செய்திகள்

போடியில் ஆசிரியையை கத்தியால் குத்திய வாலிபர்

Published On 2018-06-18 10:09 GMT   |   Update On 2018-06-18 10:09 GMT
போடியில் சாலையில் நடந்து சென்ற பள்ளி ஆசிரியையை வாலிபர் கத்தியால் குத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலசொக்கநாதபுரம்:

போடி பஸ்நிலையம் அருகே வசிப்பவர் சங்கரநாராயணன். இவரது மனைவி மாலதி(வயது42). திருமலாபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இன்று காலை மாலதி வழக்கம்போல் பள்ளிக்கு செல்ல வீட்டில் இருந்து பஸ்நிலையம் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது திடீரென வாலிபர் ஒருவர் மாலதியை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அவரை அங்கிருந்து செல்லும்படி மாலதி திட்டினார். இதனால் ஆத்திரமடைந்த வாலிபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாலதியின் தலை, கை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக குத்தினார்.

வலி தாங்கமுடியாமல் மாலதி அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஒன்றுகூடினர். வாலிபர் கையில் ரத்தக்கறையுடன் கத்தியை பார்த்ததும் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவரை பிடிக்க முயன்றனர் கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பிச்சென்றார். ரத்த வெள்ளத்தில் போராடிக்கொண்டிருந்த மாலதியை போடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போடி நகர் போலீசார் வழக்குபதிவு செய்து ஆசிரியையை கத்தியால் குத்தியவர் மாணவரா? அல்லது வேறு ஏதேனும் பிரச்சினை காரணமாக மர்மநபர் கொலை செய்ய முயன்றாரா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்டபகலில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News